May 2, 2009

வணங்குகிறேன்.. வரவேற்கிறேன்!


அன்பிற்கினிய வாசகப் பெருமக்களே..

வணக்கம்! ‘சுப வரம்’ என்னும் இந்த பச்சிளம் சிசுவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கும் தங்களுக்கு, முதலில் இதயங்கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். இனியதொரு இறை அனுபவத்துக்குள் பிரவேசிக்கும் முன்பு, உங்களோடு சில வார்த்தைகள்..

ஓர் ஆன்மிக இதழுக்கு இப்போது என்ன தேவை? எத்தனையோ நல்ல நல்ல ஆன்மிக இதழ்கள் இருக்கும்போது ‘சுப வரம்’ இதழுக்கான அவசியம் என்ன? இது என்ன புதிதாக சொல்லப் போகிறது?

இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் நிழலாடும்.

இளைய தலைமுறையும் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய வரவேற்கத்தக்க சூழலில், அவர்களுக்கு ஆன்மிகத்தை எளிய தமிழில், புரியும் வண்ணம் எடுத்துச் சொல்ல ஒரு ஆன்மிக இதழ் தேவைதான். விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று விதவிதமான திசைகளில் வெற்றிக்கொடி நாட்டினாலும், மனிதன் இறுதியில் சரண் அடைவது இறைவனின் பாதக் கமலங்களில்தான். அப்படியொரு அற்புதம் பற்றிச் சொல்ல எத்தனை நல்ல இதழ்கள் வந்தாலும் போதாதுதானே!

இதைத் தவிர, ‘சுப வரம்’ இதழுக்கு தனித்த நோக்கம் ஒன்றும் இருக்கிறது.

யானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் குட்டிக் கதை ஒன்று..

ஒரு பெருங்கடலில், சின்னஞ்சிறு அலை ஒன்று உருண்டு புரண்டு கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ‘ஐயோ, கரையை அடைந்ததும் என் வாழ்க்கை முடிந்துவிடுமே’ என்று கவலை கொள்கிறது. அந்த சமயம், பேரலை ஒன்று சீற்றத்துடன் இதன் பின்னே வர.. ‘ஐயய்யோ, இது என்னை விழுங்கப் போகிறதே.. என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா?’ என்று ஓலமிடுகிறது.

அப்போது அந்தப் பேரலை இதைப் பார்த்து கனிவோடு கூறுகிறது & ‘‘கவலைப்படாதே சிற்றலையே! நீ அழிந்துபோக மாட்டாய். நீ கண நேரமே தோன்றும் சின்னஞ்சிறு அலை மட்டுமே அல்ல. உன்னைப் படைத்த இந்தப் பெருங்கடலின் மாறுதலற்ற உண்மையான தண்ணீரே ஆவாய்! இந்தக் கடலே உன்னை, என்னை.. இன்னும் எத்தனையோ அலைகளை படைத்த கடவுள்! இந்தக் கடல், உன்னிடம், என்னிடம் மற்ற அலைகளில்.. என்று எங்கும் பரவி இருக்கிறது. உண்மையில் நீயும் தண்ணீர்தான். இந்தக் கடலும் தண்ணீர்தான். தண்ணீரான உனக்கு அழிவே இல்லை!’’

இதைச் சொன்ன தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், ‘‘கடலும் அலையும் உண்மையில் எப்படி ஒரே தண்ணீராகுமோ.. அப்படித்தான் இறைவனும் நீயும் உண்மையில் அளவற்ற ஒரே சைதன்யம் ஆவீர். சைதன்யமான உன்னிடத்தில்தான் இந்த அனைத்துலகும் இருக்கிறது. அதைப் படைத்த இறைவனும் இருக்கிறான்..’’ என்கிறார்.

ப்படியாக, ‘தெய்வம் நீ என்று’ உணரவைக்கும் முயற்சிதான் ‘சுப வரம்’! புற உலகின் தாக்கங்களால் தினம்தினம் பெருகிவரும் மனவேதனைகளை துடைத்து எறிய வைத்து, தளர்வறியா மனம் தரும் இதழாக இது விளங்கும். இந்த வாழ்க்கையே ஒரு வரம்தான் என்பதை உணர்த்தி, மகிழவைக்கும்.

இந்த முயற்சிக்கு உங்களின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். இதழை ஆழமாக படித்துப் பார்த்து, உங்களின் விமர்சனங்களால் தொடர்ந்து எங்களை வழிநடத்த வேண்டுகிறேன்.

இந்த இதழ் பற்றிய உங்கள் கருத்தறிய எங்கள் குழுவே ஆவலோடு காத்திருக்கிறது.

நன்றியுடன்

ம.கா.சிவஞானம்

ஆசிரியர்

No comments: