Dec 15, 2009


கோவை சரளா.. தெரியாத நிஜம்!

எல்லோருக்கும் தெரிந்த வி.ஐ.பி&க்களின் வெளியில் தெரியாத நிஜ இயல்புகளை விசாரிக்கும் தொடர் பகுதி இது! இந்த இதழில், உங்களை நெகிழ வைப்பது கோவை சரளா!

திரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தோழி, நிஜத்தில் ஒரு மெழுகுவர்த்தி மாதிரி! தன் உடன் பிறந்தவங்களுக்காக சின்ன வயசிலருந்து உழைச்சு, அவங்க பசங்களைத் தன் பசங்க மாதிரி வளர்த்து, ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணமும் பண்ணிப் பார்க்கும் பெரிய மனசுக் காரி!’’
- ‘கோவை சரளா’ பற்றி இப்படிச் சொல்லி உருகுகிறார், அவரது கால் நூற்றாண்டு கால தோழியான ராணி.

கொங்கு தமிழில் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கோவை சரளாவின் இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியானது. இதோ, அவரோடு நெருங்கிப் பழகும் மூவர், சரளா பற்றி வெளியுலகம் அறியாத நிஜங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

லதா மோகன்தாஸ் (சரளாவின் நெருங்கிய தோழி மற்றும் சம்பந்தி), திருநெல்வேலி:
‘‘எனக்கு சரளாவை எட்டு வருஷமாதான் தெரியும்.. ஆனா, எண்பது வருஷப் பழக்கம் மாதிரி அப்படி ஒரு அன்பும் அன்னியோன்யமும் வந்துடுச்சு எங்களுக்குள்ள.. கோயம்புத்தூர் கணபதில, சரளாவோட அக்கா வீடும் எங்க அண்ணா வீடும் நெய்பர்ஸ்.. நான் அண்ணா வீட்டுக்குப் போறப்ப, சரளாவும் அவங்க அக்கா வீட்டுக்கு வந்திருந்தாங்கன்னா, பார்த்துப் பேசுவேன். அப்படி ஆரம்பிச்ச பழக்கம்தான், சம்பந்தம் பண்ற அளவுக்கு வளந்துடுச்சு. எங்க பொண்ணை, சரளாவோட அண்ணா பையனுக்கு கல்யாணம் செய்து கொடுத்திருக்கோம்.

ரெண்டு மூணு வருஷமா என்னோட தீபாவளியே சென்னையில சரளா வீட்டில்தான்! வருஷாவருஷம் எனக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்துடுவாங்க.. அதுமட்டுமல்ல, தன் வீட்டு செக்யூரிடிலருந்து, பக்கத்து அபார்ட்மென்ட் வாட்ச்மேன், எதிர்த்தாப்ல இருக்கற மெக்கானிக் ஷெட் பசங்கனு எல்லாருக்கும் துணி எடுத்துத் தருவாங்க.. தீபாவளி அன்னிக்கு அவங்க அத்தனை பேருக்குமே சரளா வீட்டுலதான் லன்ச். அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 50,000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, அந்தத் தெருவுல எல்லாருக்கும் கொடுத்து வெடிக்க வெச்சு, அவங்க சந்தோஷப்படறதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவாங்க.. அப்படியொரு மனசு!

ஒரு சமயம், நாங்க எல்லாரும் பேசிக்கிட்டிருக்கறப்ப, சரளாவோட ஸ்கூல் மேட் ஒருத்தங்க கணவரை இழந்து குழந்தைங்களோட கஷ்டப்படறதைப் பத்தி பேச்சோட பேச்சா சொல்லிட்டிருந்தாங்க அவங்க அக்கா. உடனே, அந்த ஃப்ரெண்ட் இப்ப எங்க இருக்காங்கன்னு தேடிப் பிடிச்சு, அவங்க குழந்தைங்களோட படிப்புச் செலவுக்கு பண உதவி செய்தாங்க. ஸ்கூல் டேஸ்&க்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் எந்த ‘டச்’&ம் இல்ல.. ஆனாலும், ஓடிப் போய் உதவின மனிதநேயம்.. அதுதான் சரளா!

அதேமாதிரி, காசிக்குப் போகணும்னு ஆசைப்பட்டு, வசதி இல்லாததால போக முடியாம இருந்த வயசான ஒரு தம்பதிக்கு, காசிக்கு போய்ட்டு வர்றதுக்கு அரேன்ஜ் பண்ணினாங்க.. டூர் முடிச்சிட்டு வந்தவங்க, ‘எங்க புள்ளைங்க நிறைவேத்தாத ஆசையை, நீ நிறைவேத்திட்டம்மா.. இந்தப் புண்ணியம் முழுதும் உனக்குத்தான்!’னு சொல்லி, கண்கலங்கினதை மறக்கவே முடியாது!

கஷ்டப்படறவங்களுக்கு உதவுறதுல, எம்.ஜி.ஆர் தான் சரளாவோட ரோல்மாடல்.மருத்துவம், கல்வினு பல பேருக்கு உதவி செய்திருக்காங்க.

சரளாவுக்கு சமையல்னா ரொம்ப இஷ்டம்.. சென்னையில தன் வீட்ல அவங்க சமைக்கிறதுக்கு ஆள் வச்சுக்கலன்னா பார்த்துக்குங்க. ஹைதராபாத்துக்கு அடிக்கடி ஷூட்டிங் போறதால ஆந்திரா அயிட்டம்லாம் நிறைய கத்துக்கிட்டு வந்து செய்வாங்க.. ஆந்திரா சமையல்லருந்து அந்தக் காலத்துல செய்ற மருந்துக் குழம்பு வரை, நிறைய அயிட்டம் நான் சரளாகிட்ட கத்துக்கிட்டிருக்கேன்.

சரளாவுக்கு நாலு அக்கா, ஒரு அண்ணா.. எல்லோரும் ரொம்பப் பாசமா, ஒற்றுமையா இருப்பாங்க.. சரளாவை தவிர மத்த எல்லோருமே கோவையிலதான் இருக்காங்க.. அதனால, நேரம் கிடைக்கறப்ப எல்லாம் சரளா கோவைக்கு வந்துடுவாங்க. அவங்க அக்காக் களும் பசங்களும் ‘சரளா’ன்னா உயிரையே விடுவாங்க.

சரளாவோட அக்கா ஒருத்தங்க சின்ன வயசிலேயே இறந்துட் டாங்க.. அவங்க பையனை சரளாவேதான் தன் கூட வச்சு வளர்த்துட்டு வர்றாங்க.. எங்க மாப்பிள்ளையும் (அவங்க அண்ணா பையன் & யு.எஸ்&ல மைக்ரோஸாஃப்ட்ல வேலை பார்க்கிறார்) சரளாகிட்ட வளர்ந்தவர்தான். பசங்க எல்லாம் அண்ணா யுனிவர்ஸிடில படிச்சுப் பெரிய வேலையில இருக்காங்க.. ஒரு பாக்கு கூட போட மாட்டாங்க.. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம அப்படி ஒரு கண்டிப்பான வளர்ப்பு அவங்களோடது..

குடும்பத்தில் இருக்கறவங்களுக்கு டிரஸ், நகைனு வாங்கிக் கொடுத்து போட்டுக்கச் சொல்லி அழகு பார்ப்பாங்களே தவிர, தான் ஆடம்பரமா எதுவுமே போட்டுக்க விரும்ப மாட்டாங்க.. கழுத்தில ருத்ராட்சம் கோர்த்த ஒரு மணிமாலைதான்! கிட்டத்தட்ட ஒரு துறவி போல வாழ்க்கை நடத்தும் சரளாவோட நட்பு, எனக்குக் கடவுள் கொடுத்த பரிசு!’’

மீனா சம்பத்குமார், கோவை (சரளாவின் அக்கா மகள்):
‘‘கோவை சரளாவின் நாலாவது அக்கா பொண்ணு நான்! சரளா சித்தியை நாங்க ‘ஜெம்லி’னுதான் கூப்பிடுவோம். அந்தப் பேர் எப்படி வந்ததுனு எல்லாம் தெரியாது. ஆனா, எங்க வீட்ல பெரியவங்கள்லருந்து சின்னவங்க வரைக்கும் அவங்க, ‘ஜெம்லி’தான்..

எங்க ஃபேமிலியோட ‘பைண்டிங் ஃபேக்டர்’ அவங்கதான்.. குடும்பத்தோட அவ்வளவு பாசப்பிணைப்பா இருப்பாங்க.. ஜெம்லி சென்னையில இருந்தாலும், கோவையில இருக்கற எல்லா குடும்பத்திலருந்தும் எல்லா ‘அப்டேட்ஸ்’ம் பக்காவா அவங்களுக்குப் போயிடும்.. ஷூட்டிங், ஃபங்ஷன், அது, இதுன்னு பிஸியா இருந்தாலும், கம்யூனிகேஷனை அவ்வளவு அழகா மெயின்டெயின் பண்ணுவாங்க.

ஆண், பெண் வித்தியாசம் இல்லாம எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்யணும்கிறது ஜெம்லியோட உத்தரவு. அதனால, சமையல்லருந்து டிரைவிங் வரை எல்லாருமே எல்லாம் கத்துக்கிட்டிருக்கோம்.. எங்க வீட்டு வேலைக்கு ஆள் இருந்தாலும், டாய்லட் சுத்தம் செய்றது உள்பட எந்த வேலையாக இருந்தாலும், அவசியம்னா நாங்களும் செய்வோம்.

ஜெம்லி படிச்சதெல்லாம் கோவையில தான்.. ஸ்கூல்ல படிக்கறப்பயே, நல்ல பேச்சுத் திறமை இருந்தது ஜெம்லிக்கு! ஒருமுறை, எம்.ஜி.ஆர். கோவை வந்திருக்கறப்போ, ஜெம்லியை அவருக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. அவர், ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்’னு சொல்லி, ஸ்காலர்ஷிப் கொடுத்திருக்கார். அந்த ஸ்ஸாலர்ஷிப் உதவியில படிச்சதாலதான், அவங்களுக்கு ‘நாமும் பிறருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்யணும்’கிற எண்ணம் சின்ன வயசிலேயே ஆழமாப் பதிஞ்சிருச்சு!

ஜெம்லிக்கு சிம்பிளா டிரெஸ் பண்றது தான் பிடிக்கும். நிறங்கள்ல வெள்ளையும், மாம்பழ மஞ்சளும் ரொம்பப் பிடிக்கும். அவங்களோட இஷ்ட தெய்வம்னா அது குருவாயூரப்பனும், பகவதி அம்மனும். சொந்த ஊர் திருச்சூர்.. வருஷம் ஒரு தடவை எல்லோரும் குலதெய்வம் கோயிலுக்கு கண்டிப்பா போயிடுவோம்.

ஜெம்லி, யாரையும் புண்படுத்தற மாதிரி பேசவே மாட்டாங்க.. கோபத்தை கூட அவங்க காண்பிக்கிற விதம் வித்தியாசமா இருக்கும். ‘ஒரு விசேஷம் நடக்குது.. அதுல ஜெம்லிக்கு ஏதோ ஒரு கோபம்’னா, நாங்க எல்லாரும் கிராண்டா ஸாரி கட்டிட்டிருக்கும் போது, அவங்க மட்டும் ரொம்ப சிம்பிளா ஒரு டிரெஸ் போட்டுக்கிட்டு வருவாங்க.. அதுலருந்து அவங்களுக்கு ஏதோ பிடிக்கல, கோபமா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

பொண்ணுங்கன்னா யாரையும் சார்ந்திருக்காம, தன் கால்ல சுதந்திரமா இருக்கணும்கிறது அவங்களோட எண்ணம். நாங்க பசங்கல்லாம், பிறரை எதிர்பார்க்காம எங்க கால்ல நிக்கிறோம்னா, அதுக்குக் காரணம் அவங்கதான்! என்னைப் பொறுத்தவரை, ஜெம்லி.. ‘எ ஸிம்பல் ஆஃப் மோட்டிவேஷன்’!’’

ராணி சண்முகம் (சரளாவின் கால் நூற்றாண்டுத் தோழி), சென்னை:
‘‘25 வருஷத்துக்கு முன்னால நாங்க கோடம்பாக்கத்துல இருந்தப்போ, எங்க எதிர்வீட்டுல குடியிருந்துச்சு ஜெம்லி (நாங்களும் அப்படித்தான் கூப்பிடுவோம்). அப்போ ஆரம்பிச்ச பழக்கம்! அப்புறம், சாலிகிராமத்துல சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போனாலும், நட்பு விட்டுப் போகல..

ஜெம்லியோட அம்மாவை நானும் ‘அம்மா’னுதான் கூப்பிடுவேன்.. அவங்களுக்கு அஞ்சு பொண்ணோட சேர்த்து, நானும் ஒரு பொண்ணாகிட்டேன்.. இப்பவும் கூட என்ன பண்டிகை, விசேஷம்னாலும் ஒரு தாய் வீட்டிலருந்து பொண்ணுக்கு சீர் வர்ற மாதிரி, ஜெம்லி வீட்லருந்து எனக்கு எல்லாம் வந்திடும்.

எல்லார் வீட்டுலயும் டிரைவர், வேலைக்காரங்க மாறிக்கிட்டே இருப்பாங்க இல்ல? ஆனா, ஜெம்லி வீட்ல மட்டும் அந்தக் காலத்திலருந்து இப்ப வரை, மேக்&அப் மேன்லருந்து டிரைவர் வரை எல்லாருமே பழைய ஆளுங்கதான்.. ஏன்னா, அவங்களுக்கு வீடு கொடுத்து, குழந்தைகளின் படிப்புச் செலவை ஏத்துக்கிட்டு, அவங்க குடும்பப் பிரச்னையை தன் பிரச்னையா நினைச்சு உடனே சரிசெய்ற ஜெம்லி இருக்கறப்போ, அவங்க ஏன் வேற இடத்துக்குப் போகப் போறாங்க!

திரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தோழி, நிஜத்தில் ஒரு மெழுகுவர்த்தி மாதிரி! தன் குடும்பத்தினருக்காக சின்ன வயசிலருந்து உழைச்சு, உடன்பிறந்தவங்க பசங்களைத் தன் புள்ளைங்க மாதிரி வளர்த்து, ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணமும் பண்ணிப் பார்க்கும் பெரிய மனசுக்காரி! ‘தாயைக் காத்த தனயன்’னுதான் கேள்விப்பட்டிருக்கோம்.. ஆனா தாயைக் கண் போலக் காத்திட்டிருக்கிற மகள் இவ!

ஒருசமயம் எனக்கு அப்பண்டிசைடிஸ் ஆபரேஷன் ஆகி, ஆஸ்பத்திரியில இருந்தேன்.. அந்த சமயம் ஜெமிக்கு நல்ல ஜுரம்.. முதல் நாள் தான் அது ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்திருக்குது. ஆனா, நான் அட்மிட் ஆகியிருக்கறதைக் கேள்விப்பட்டு, ஜுரத்தோட வந்து, மூணு மாடி ஏறிவந்து, ‘உனக்கு ஒண்ணும் இல்லடி.. பயப்படாத.. தைரியமா இரு!’னு சொல்லிட்டுப் போச்சு. அந்த அன்பும் கரிசனமும் என்னை உருக்கிடுச்சு!

ஒருமுறை ஷீர்டி போய்ட்டு வந்தப்ப, எனக்காக அங்கருந்து ஒரு பாபா சிலை வாங்கிட்டு வந்துச்சு.. ‘எனக்காக நீ பாபாகிட்ட வேண்ட, வேண்ட.. நான் நல்லாயிருப்பேன் ராணி’னு சொல்லுச்சு! இப்பவும் எங்க பூஜையறையில இருக்கும் அந்த பாபாகிட்ட தினமும் நான் அவளுக்காக வேண்டறேன்.. ஜெம்லி இன்னும் நல்லா, சிறப்பா, சந்தோஷமா இருக்கணும்னு!’’

- பிரேமா நாராயணன்

Jul 31, 2009

'மல்லிகை மகள்' உங்கள் வீடு தேடி வர..

'மல்லிகை மகள்' இதழ்
உங்கள் வீடு தேடி வரவேண்டுமா?

ஒரே ஒரு *போன்கால் போதும்..

இப்போதே அழையுங்கள்..
95000 50650

* தமிழ்நாட்டு அழைப்புகளுக்கு மட்டும்

கணவரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?

ஆகஸ்ட் 2009 மல்லிகை மகள் இதழிலிருந்து ஒரு கட்டுரை..
கணவரிடம் நல்ல பெயர் எடுப்பது எப்படி?
ஒரு
மாலைப் பொழுதில் ஆழ்ந்த கலந்துரையாடலில் இருந்த ‘அண்ணாநகர் (சென்னை) லேடீஸ் கிளப்’ பெண்கள் மத்தியில் இப்படியொரு கேள்வியை கொளுத்திப் போட்டோம். உற்சாக பட்டாசாக சீறி வந்தன உபயோகமான டிப்ஸ்!

‘‘கணவருக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாலே அவரோட மனசை ஈஸியா ஜெயிச்சிடலாம். அதேமாதிரி, கரண்ட் பில் கட்டறது, வீட்டை நிர்வாகம் பண்றதுனு நம்மால முடிஞ்சதை செய்யணும். கணவரைவிட அதிகமா நாம படிச்சிருந்தாலும் சரி, அவரைவிட அதிகமாக சம்பாதித்தாலும் சரி, கர்வமில்லாம பணிவா நடந்துக்கிட்டா கணவரோட மானசீக மகாராணியாகிடலாம்!’’ என்று கலந்துரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டார் கிளப்பின் செகரட்டரி தங்கமணி விஸ்வநாதன்.

‘‘கரெக்ட் மேடம்.!’’ என்று ஆமோதிப்போடு தொடங்கிய கிளப்பின் துணைத்தலைவர் மீரா சங்கரமூர்த்தி, ‘‘அதேபோல, தனக்குப் பிடித்தவர்கள் நம்ம வீட்டுக்கு வந்தா அவங்களுக்கு மனக்குறை ஏதும் வராதபடி நல்லா உபசரிக்கணும்கிறதும் ஆண்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இப்படி, அவருக்கு கெட்ட பேர் வராதபடிக்கு நாம நடந்துக்கிட்டாலே நல்ல பேர் வாங்கிடலாம்..’’ என்று கூற, இடைமறித்தார் கீர்த்தி நாராயணன்.

‘‘அதோட, ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு டயர்டா வர்ற கணவர்கிட்ட, ‘ஏன் முகம் இப்படி இருக்கு, ஆபீஸ்ல இன்னிக்கு என்ன நடந்தது, அப்படி இப்படி..’னு கேட்டு தொணதொணக்க கூடாது. சூடா காபியோ, டீயோ போட்டுக் கொடுத்து, அவருக்கு தேவையானதை செய்துட்டு நகர்ந்திடணும். ஏதாவது சீரியஸான பிரச்சனைன்னா அவரே சொல்லிடப் போறார். அதேமாதிரி, நமக்கு ஒரு பொருள் வாங்கணும்னு தோணும்போது கணவர் இப்போ இதை வாங்கவேண்டாம்னு சொல்றார்னா சரினு கேட்டுக்கணும். ஏன்னா, வாங்கக்கூடிய சூழ்நிலை இப்போ இல்லைனு அவருக்கு தெரியும்போது, நமக்கும் அது தெரியணும்தானே!’’ என்றார் யதார்த்தமாக.

‘‘நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் அமைதியான டைப்ங்கறதால, ஒருத்தருக்கொருத்தர் நல்லாவே அட்ஜஸ்ட் பண்ணிப்போம். என்கூட பிறந்தவங்ககிட்ட பழகற மாதிரியே அவரோட சகோதர சகோதரிகள்கிட்ட நான் பழகறது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பொதுவாக அவர் ஏதாவது ஒரு காரியத்தை செய்யாதேன்னு சொன்னா, அதை மீறி இது நாள் வரைக்கும் நான் செய்தது இல்லை. எல்லா விஷயத்திலயும் நாங்க 50&50தான்’’ என்றார் வேணி மகாலிங்கம் மென்மையான புன்னகையுடன்.

‘‘கண்டிப்பா, இது எல்லோருமே ஃபாலோ பண்ண வேண்டிய ஒண்ணுதான். அதோட, பெரும்பான்மையான ஆண்களுக்கு.. என் வீட்டுக்காரர் உட்பட, அவங்களோட உடன்பிறந்தவங்ககிட்ட பாசம் காட்ட தெரியுமே தவிர, எந்தெந்த விசேஷத்துக்கு என்னென்ன செய்முறை செய்யணும், என்னென்ன வாங்கிக் கொடுக்கணும்ங்கறது சரியா தெரியாது. பல நேரங்கள்ல எங்க வீட்டு விசேஷங்கள்ல, அவர்கிட்டேயிருந்து பணத்தைக் கூட எதிர்பார்க்காம, நான் சேர்த்து வைச்சிருக்கிற பணத்தை வைத்தே தேவையானதை செய்திடுவேன். அப்புறம் அது அவருக்கு தெரியவரும்போது, ரொம்பவே சந்தோஷப் படுவார். அதேமாதிரி, அவருக்கு பிடிக்காத எதையும் நான் செய்யமாட்டேன். அதுக்காக அவர் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி விடுவேன்னு இல்லை. ‘ரெசிஸ்டன்ஸ்’ (எதிர்ப்பு) இல்லாத வாழ்க்கையில ருசி இல்லை தானே’’ என்றார் ரேவதி நடராஜன்.

அண்ணாநகரில் ‘பொட்டீக்’ நடத்திவரும் பத்மினி குமாரவேலு, ‘‘என்னைப் பொறுத்தவரை கணவருக்கு பிடித்த மனைவியா இருக்கணும்னா, அதுக்கு மூணு விஷயங்கள் முக்கியம். ஒண்ணு, அவருக்கு பிடித்தமான சமையல். இரண்டாவது, கணவர்கிட்ட ஒளிவு மறைவு இல்லாம இருக்கறது. நம்மை பத்தின ஏதாவது ஒரு விஷயம், அது தப்பாவே இருந்தாகூட அது இன்னொரு நபர் மூலமா தெரியறதைவிட நம்ம மூலமா கணவருக்கு தெரியறதுதானே நல்லது. மூணாவது, அவரோட பெற்றோரை நம்ம பெற்றோரா நினைத்து நல்லாப் பார்த்துக்கறது. இந்த மூணும் சரியா இருந்துட்டாலே கணவர்கிட்ட எளிதாக நல்ல பேர் வாங்கிடலாம்!’’ என்று டிப்ஸ்களை அள்ளி விட்டார்.

‘‘சரியா சொன்னீங்க பத்மினி! அதே போல, குறிப்பறிந்து நடந்துக்கறதும் ரொம்ப முக்கியம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரசனைங்கிறதால கடைக்கு ஏதாவது வாங்கப் போகும்போதுகூட பெரிசா அபிப்ராய பேதம் ஏதும் வந்ததில்லை. ஆனாலும், ஏதாவது ஒண்ணு, எனக்கு பிடிச்சு அது அவருக்கு பிடிக்கலைன்னா, அதை அவரது முகமே காட்டி கொடுத்து விடும். குறிப்பறிந்து நானும் அதை வேண்டாம்னு விட்டுடுவேன். அதேபோல, அவர் வெளியில போயிட்டு வரும்போது, பூட்டிட்டு நான் எங்கேயும் போயிடாம வீட்டில இருக்கணும்னு எதிர்பார்ப்பார். ‘வெளியில பல வேலையா போயிட்டு வர்ற மனிதருக்கு வீட்ல வந்து நம்ம முகத்தை பார்த்தா எதிர்பார்க்குறார்&னு அவரோட கோணத்திலிருந்து புரிஞ்சி கிட்டாலே போதும், அமைதியான ஓடை போல வாழ்க்கையும் சீராக போகும்!’’ என்று அனுபவக் குறிப்பை வழங்கிய அழகம்மை பழனியப்பன், தனது அக்காவின் மறைவுக்கு பிறகு, அக்கா கணவருக்கு இரண்டாவது மனைவியானவர். அக்காவின் இரு மகன்கள், தனது மகன் என மூன்று மகன்களையுமே தான் நன்றாக கவனித்துக் கொள்வதும் தனது கணவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர்.

அமைதியாகவே இருந்த பிரமிளா பாலகிருஷ்ணனை, ‘‘என்ன பிரமிளா மேடம், நீங்க நல்ல பெயர் வாங்கற ரகசியத்தை எங்களுக்கு சொல்லக்கூடாதா?’’ என்று மீரா சீண்ட.. ‘‘பெரிய சிதம்பர ரகசியம் எல்லாம் ஒண்ணுமில்லை. எங்க பாட்டி எங்க எல்லாருக்கும் சின்ன வயதிலிருந்து ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லுவாங்க.. அதாவது, வீட்டு பெண்களோட குரல் வீட்டைத் தாண்டி வெளியில கேட்கக்கூடாதுனு. பொறுமையா, மென்மையா, நிதானமா எல்லா விஷயங்களையும் கையாண்டாலே போதும், இல்லறம் இனிய இல்லறமா, நல்லறமா இருக்கும்!’’ என்றார் பிரமிளா, முத்தாய்ப்பாக.

சும்மாவா சொன்னார் வள்ளுவர், ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்று.

- பானு, படங்கள்: பாட்ஷா

Jul 1, 2009

ஜூலை 2009 - சுப வரம் இதழில்..


* சிறைவைக்கப்படும் பிள்ளையார் - ஒரு விநோத பிரார்த்தனை

* கடன் தொல்லை நீக்கும் கண் கண்ட தெய்வம்! - அதிசய அனுபவங்கள்

* அனுமார் கல்யாண வைபோகமே!

* மடைப்பள்ளி ரகசியம் - மயிலாப்பூர் ஷீர்டி பாபா கோயில் வெண்பொங்கல்

* தெய்வம் தந்த மறுஜென்மம் - கமலா தியேட்ட வி.என்.சிதம்பரம் அனுபவம்

* கண்டேன் இறைவனை! பரவசமூட்டும் அனுபவங்கள்

* ஆண்டிக்கோல முருகன் வீட்டுக்கு ஆகாதா? - ஷண்முக சிவாசார்யர் பதில்

* பக்தி காவியங்கள் பிறந்த கதை தொடரில்.. விதுர நீதி

* ஹதயோகம் - ஸ்வாமி ஓம்கார்

* ஷீர்டி சாயி புராணம் - முதல் அற்புதம்

* வக்கிரங்களிலிருந்து காப்பாற்றும் வக்ர காளி - அதிசய கோயில்கள்!

* இறைவனின் இல்லங்கள் - ஸ்தபதி தட்சிணாமூர்த்தி சிறப்பு பேட்டி

* கேரள பிரசன்ன மாத பலன்கள் - ஸ்வாமி ஓம்கார் வழங்கும் 32 பக்க இணணப்பு

ஜூலை இதழ் மல்லிகை மகள் இதழில்..


* இதய நோய்க்கு செலவில்லாத வைத்தியம்!

* என் வீடு.. என் கனவு! - இண்டீரியர் விருந்து

* பணம் காய்க்கும் மரம்! வசதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் தொடர்

* நித்தம் நித்தம் சத்துணவு.. டயட் தொடர்

* ட்வெண்டி -20.. புதிய பகுதி

* இரண்டே ஆண்டுகளில் ஜெயித்தேன்.. பிஸினஸ் வெற்றிக் கதை

* குழந்தைகள் மனசு - 25 டிப்ஸ்

* ஐஸ்லாந்து - அமைதிப்பூங்கா

* நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் - டானிக் ஸ்டோரி

* மசாலா கிரேவி வகைகள்.. 32 பக்க இணைப்பு

Jun 2, 2009

உங்கள் கவனத்துக்கு!





சுப வரம் - ஜூன் இதழ்..
மற்றும்
மல்லிகை மகள் - ஜூன் இதழ்


இப்போது விற்பனையில்..


May 26, 2009

உஷார்! உங்களுக்கும் இது ஒரு பாடம்!

சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் பிரம்மாண்டமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை..

இலவச மருத்துவ சிகிச்சைப் பகுதியில், இரண்டாம் தளத்திலிருந்த பெண்கள் வார்டின் கடைசி வரிசையில் முதல் கட்டில்.. கட்டில் சைஸுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சிறிய மைனாக்குஞ்சு போல உட்கார்ந்திருந்தார் அந்த அம்மையார். வயது 86.

‘‘மணி என்ன இப்போ? ஆறே முக்கால் ஆச்சா? அப்ப, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு கொண்டுவந்துடுவான்..!’’ என்று மூன்றாவது தடவையாக சொல்லிவிட்டு, அந்த வார்டின் வாசல்புறம் பார்த்துவிட்டு நம்மைப் பார்த்துச் சிரித்தார். ஆங்காங்கே சில பற்கள் விழுந்திருக்க, குழந்தையின் சிரிப்புப் போன்றிருந்தது அது.

புன்னகைக்கத் தோன்றாமல், வயிற்றைப் பிசைந்தது நமக்கு!மூப்பு காரணமாகக் குறுகியிருந்த உடலைவிடப் பெரிய சைஸிலான நைட்டி.. கால்களுக்குக் கீழே விழுகிறது என்பதால் இடுப்பில் கொஞ்சம் சுருட்டி, ஒரு நாடாவை வைத்துக் கட்டி விடப் பட்டிருந்தது. கண்ணாடிக்குப் பின் கருவிழிகள் கூர்மையாக போவோர் வருவோரை அலசியபடியிருக்க, வாய் அவர்களைப் பற்றியோ, அந்த வார்டு, அதன் தலைமை மருத்துவர், டியூட்டி நர்ஸ்கள், சக படுக்கை நோயாளிகள் பற்றிய ஏதாவது ஒரு தகவலை உதிர்த்தபடி இருந்தது.

கட்டில் அருகிலேயே வாக்கர்! அதில் காயும் ஒரு நைட்டி, ஒரு துண்டு. அவரருகே ஒரு டைரி, ஒரு பேனா.. ஒரு மொபைல். இடதுபுறமிருந்த வெள்ளை நிற குட்டி அலமாரியில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகள், இரண்டு ஆப்பிள், ஒரு தட்டு, இரண்டு டம்ளர்.. தண்ணீர் (கூல்ட்ரிங்க் வந்த) பாட்டில்கள்..
இந்த அம்மையார், ஒரு காலத்தில் இலக்கிய உலகின் முடிசூடா ராணியாக விளங்கியவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
கணவருக்கு மிக உயர்ந்த அரசுப் பணி. கை நிறைய சம்பளம். இந்த அம்மையார் எழுதிக் குவித்ததும் அதன் மூலம் அவர் பெற்ற விருதுகளும் ஏராளம்.. ஏராளம்! இன்று பல்கலைக் கழகங் களில்கூட அவருடைய எழுத்துக்கள் பாடமாக இருக்கின்றன. சென்னையில் சொந்தவீடு, வங்கியில் கணிசமான இருப்பு, நகைகள், வீடு கொள்ளா விருதுகள் என ராணி போல வளைய வந்தவர்தான்.. ஆனால், உறவினர்கள் மேல் வைத்த அதீத நம்பிக்கையும், வளர்ப்பு மகன் மேல் கொண்ட அளவற்ற பாசமும் அவரை இப்படி ஒரு பரிதாப நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.

நாம் அவரை ‘அம்மா’ என்றே அழைப்போம். அம்மாவுக்கு பூர்விகம் தஞ்சாவூர்ப் பக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, கணவருக்கு அடிக்கடி மாற்றல் வரும் உத்தியோகம். புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்றால் அம்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல! அந்த சூழலையும் அந்த மனிதர்களையும் தனது அடுத்த கதையிலோ, நாவலிலோ பதிவு செய்துவிடுவார். இப்படி, மனைவிக்கு பிடிக்கும் என்பதாலேயே யாருமே போக விரும்பாத மலைப்பிரதேசங்கள், கிராமங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் என்றாலும்கூட கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிடுவார் கணவர். அப்படி ஒரு காதல் வழியும் தம்பதி!

அவர்களுக்கு ஒரே குறைதான்! திருமணமாகி ஆண்டுகள் பல ஆகியும், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. முற்போக்குக் கருத்துக்களும் பெண்ணுரிமைவாதியுமான அம்மா, அதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொண்டார். அதிகம் கவலைப்படவோ, கோயில், பிரார்த்தனை என்று போகவோ செய்யவில்லை. யதார்த்தத்தை அது வரும் போக்கிலேயே எடுத்துக்கொண்டு வாழ்ந்தனர்.

அம்மாவுக்கு சகோதர, சகோதரிகள் அதிகம். அவர்களின் குழந்தைகளுக்குப் பிரியமான அத்தையாக, சித்தியாக இருந்தார். தனக்குப் பிள்ளை இல்லாத குறை தீர, உடன்பிறந்தவர்களின் குழந்தை களைக் கொஞ்சி மகிழ்ந்தார். அதில் ஒரு குழந்தை இவரிடம் அதிகமான ஒட்டுதலுடன் வளர்ந்தது. இவர்கள் வீட்டிலேயே, வளர்ந்து பெரியவனாகி, வேலைக்கும் போனார் அந்த வளர்ப்பு மகன். தன்னுடைய பாசம் முழுவதையும் அந்த மகன் மீது கொட்டி வளர்த்தார் அம்மா.

ஆனால், அத்தனை பாசமும் மிகப்பெரிய கேள்விக் குறியாக நின்றது, எட்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் இறந்தபோது!
அம்மாவின் கணவர் இறந்தபோது, வந்த ஜனக்கூட்டம் போனபோது வீடு ‘வெறிச்’ என்றானது. உறவினர்களும் போனபிறகுதான், அம்மாவுக்கு ‘தான் தனிமரமாக’ நிற்பது உறைத்தது. என்ன எழுதி என்ன பயன்? அவருடைய தனிமையைப் போக்க எதுவுமே உதவவில்லை. ‘சொந்தங்கள்தான் இருக்கிறதே!’ என்று அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லோருக்கும் போன் செய்தபோது.. அவர்கள் சொன்ன பதில் -

‘‘அவ்வளவு பெரிய வீட்ல நீ மட்டும் இருக்காத.. யாராவது வந்து, உன்னை ஏதாவது பண்ணிட்டு, இருக்கறதை கொள்ளையடிச்சிட்டுப் போயிடப் போறாங்க! வீட்டை வித்து, பேங்க்&ல போட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடு. நீ எங்க கூடவே இருந்துக்கலாம்!’’

அப்புறம் நடந்ததெல்லாம் இவர் கைமீறிய விஷயங்கள்தான்!

மூன்று கிரவுண்டில் இருந்த அந்தப் பெரிய வீடு.. அம்மாவும் அவருடைய கணவரும் பார்த்துப் பார்த்துக் கட்டிய கனவு மாளிகை.. அம்மாவின் எழுத்துக்களுக்கு உயிர் தந்த அதன் மலர்த் தோட்டம்.. விலை பேசப்பட்டது.
வீட்டை விற்ற பணத்தை அக்கவுன்ட்டில் போட்டார்கள். வாங்கிய பார்ட்டிக்கு வீட்டை ஒப்படைக்கும் முன்பு, மாபெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர் சொந்தங்கள். ‘‘அத்தை.. இந்த வெள்ளிப்பிடி போட்ட வாக்கிங் ஸ்டிக் மாமாவோடதுதானே! நான் வச்சுக்கறேன்..’’ என்று ஒரு மருமகள், ‘‘பெரீம்மா.. இந்தத் தங்க முலாம் பூசின நடராஜர் சிலை, உனக்கு அந்த இலக்கிய விழால கொடுத்ததுதானே! இந்த மாதிரி ஒரு சிலையைத்தான் எங்க பூஜை ரூம்க்காக ரொம்ப நாளாத் தேடிண்டிருக்கார் இவர்!’’ என்று ஒரு மகள்.. இப்படி ஆளாளுக்கு கைக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போக.. வேண்டாவெறுப்பாக அம்மாவைத் தன்னோடு அழைத்துச் சென்றார், வளர்ப்பு மகன். ஆனால், அந்த வளர்ப்பு மகனும் கடைசியில் அநாதரவாக விட்டதுதான் கொடுமை!

அப்படி, இப்படி என்று ஒவ்வொரு வீட்டிலுமாக அம்மாவைப் போட்டு இழுத்தடித்து, கடைசியாக மீண்டும் வளர்ப்பு மகன் வீட்டுக்கே வந்தபோது... அங்கே அழுது வீங்கிய கண்ணும் முகமுமாக வரவேற்ற மகனும் மருமகளும், ஒரு பெரிய ‘சோகக் கதை’யை எடுத்து விட்டிருக்கிறார்கள். தங்களின் பிசினஸில் பயங்கர நஷ்டம் என்றும், கடன் தொகை 98 லட்சமாக உயர்ந்துவிட்டதென்றும், உடனே கட்டவில்லை என்றால், குடும்பத்தோடு கம்பி எண்ண வேண்டுமென்றும்.. கதாசிரியருக்கே கதை சொல்லியிருக் கிறார்கள்.
அப்பாவி அம்மாவுக்கு பாசம் கண்களை மறைத்தது. என்ன ஏதென்று கூடக் கேட்காமல், தன் பேங்க பாலன்ஸ், நகைகள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகுதான் கொடுமையான க்ளைமாக்ஸ்!

‘கடன்களை செட்டில் செய்துவிட்டாலும், பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதால் இந்த ஊரில் இனி இருக்க முடியாது’ என்றும் ‘தாங்கள் ஊரை விட்டே போகப் போவதால், தங்களால் இனி அம்மாவை வைத்துப் பராமரிக்க இயலாது’ என்றும் அந்த வளர்ப்பு மகன் நீலிக்கண்ணீர் வடிக்க.. கரைந்து போனார் அம்மா!

அதுதான் சாக்கு என்று அவரை முதன் முதலாக முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்.

‘‘கேக்காத.. அந்தக் கண்றாவிக் கதையெல்லாம் கேக்காத.. என் பணம், நகை போகட்டும்.. அதெல்லாம் யாருக்கு வேணும்? ஆனா.. நான் உயிரா நேசிச்ச என் புத்தகங்கள்.. அற்புதமான என் லைப்ரரி.. என் திறமைக்கு கிடைச்ச அவார்டுகள்.. மெடல்கள்.. எல்லாம் இப்போ எங்கே இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது.. எனக்கு சொத்துனு.. இதோ இந்தக் கட்டிலைச் சுத்தி இருக்கற சாமான்கள்தான்!’’ என்று அவர் கதறியபோது.. காணச் சகிக்கவில்லை.
அப்போது நீலநிறச் சீருட அணிந்த பணியாள் ஒருவர் வந்து நர்ஸிடம் ஏதோ பேசிவிட்டுச் செல்ல..

‘‘அதோ அவர்தான் சாப்பாடு கொண்டுவர்றவர்.. எல்லாருக்கும் ரெண்டு சப்பாத்தி.. சாதம்! எனக்கு மட்டும் மூணு சப்பாத்தி, கூட்டு! கூட்டு கொஞ்சமாத்தான் கொடுப்பா.. நான் சாயந்தரம் தர்ற பாலை வாங்கி, குடிக்காம வச்சிருப்பேன்.. அதை சப்பாத்தில் ஊத்தி சாப்பிட்ருவேன்!’’ என்றார்.
‘கடவுளே...!’’

அந்தி சாய்ந்துவிட்டது. மிகப் பெரிய அந்த வளாகத்தின் மரத்து பறவைகள் ஏகப்பட்ட இரைச்சலுடன் கூட்டில் அடையத் தொடங்கியிருந்தன.
நீலச் சீருடை ஆளையே பார்த்தபடி பேசினார் அம்மா..
‘‘என்னை ஓல்ட் ஏஜ் ஹோம்ல விட்டதுக்கு, ஏதாவது நரகத்துல விட்டிருக்கலாம்.. கொடுமைம்மா அது! எல்லாரையும் டாய்லெட் கூட்டிட்டுப் போய் வர்றதுக்கு சங்கடப்பட்டு, மூத்திர ட்யூப் மாட்டிவிட்ருவாங்க.. எழுந்து நடக்கறப்ப, அதைத் தூக்கிண்டே நடக்கணும்.. இப்படி அங்கே நிறைய அக்கிரமங்கள்! எப்படியோ ரெண்டு வருஷம் ஓட்டினேன்.. முதல்ல வந்து பார்த்த சொந்தங்கள், அப்புறம் போன் விசாரிப்போட நிறுத்தினாங்க. அதுக்கப்புறம், அவங்க கூப்பிட்டப்போ, நான் பேசறதை நிறுத்திட்டேன். என் கணவரின் பென்ஷனையும் ஏதோ பண்ணிட்டாங்க.. எனக்கு வர்றதில்ல. என்னம்மா சொந்தம் பந்தம் எல்லாம்!’’ & விரக்தியின் உச்சத்தில் கண்ணீர்கூட காய்ந்து விட்டது.

‘‘நல்ல நடை உடையாப் போன நான், அங்கே வழுக்கி விழுந்ததில நடக்க முடியாம, வாக்கர் வச்சு நடக்கற நிலைமைக்கு ஆளாயிட்டேன்! என்னால இனிமே அங்கே இருக்கவே முடியாதுன்றபோது, எனக்கு உன்னை மாதிரி பத்திரிகை உலகத்துல இருக்கற நண்பர்களும் சிலருமா சேர்ந்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க... வந்து நாலு மாசமாகுது..
ஆனா அம்மா.. இந்த ஹாஸ்பிடல்ல சும்மா சொல்லக் கூடாதும்மா.. ஃப்ரீ வார்டுன்னாலும் கவனிப்புக்கு எந்தக் குறையுமில்ல. தினமும் மதிய சாப்பாடு, சீஃப் டாக்டர் வீட்டிலருந்து வருது.. டாக்டருக்கு சாப்பாடு கொடுத்தனுப்பும்போது, எனக்கும் கொஞ்சம் சாதம், காய்கறிகள், கீரை, பழங்கள்னு கொடுத்தனுப்புறாங்க.. நான் தத்தெடுத்த புள்ளை என்னைத் துரத்திவிட்டுட்டான்.. ஆனா, இப்போ என்னைத் தத்தெடுத்துக்கிட்ட டாக்டரின் கருணையால நான் உயிரோட இருக்கேன்!’’ என்றவர், ‘‘ஸ்,.. அப்பா..’’ என்று வலியில் முனகியபடி, திரும்பி அமர்ந்தார்.

‘‘இடுப்பும், முதுகும் வலி கொல்லுதும்மா.. நேத்து நைட் முழுதும் தூங்க முடியாம புரண்டு படுக்க முடியாம மரண அவஸ்தைப்பட்டேன்.. இன்னிக்கு ராப்பொழுது எப்படிப் போகப் போகுதோ.. தெரியலியே! ராத்திரி வந்தாவே பயமா இருக்கும்மா! யம்மாடி.. பசிக்குது.. இன்னும் சாப்பாடு வரலியே!’’ என்றவர், ‘‘அந்தப் பையில் பிஸ்கட் இருக்கு.. எடுத்துத் தர்றியாம்மா?’’ என்றார்.
நாம், ‘‘ஆப்பிள் நறுக்கித் தரட்டுமா?’’ என்றதும், ‘‘கத்தியெல்லாம் கிடையாதும்மா’’ என்றார்.

பக்கத்து ‘பெட்’காரரிடம் கேட்டு கத்தி வாங்கி, ஆப்பிளைக் கழுவிவிட்டு, நறுக்கித் தர.. வேகம் வேகமாக எடுத்துச் சாப்பிட்டார். பாவமாக இருந்தது!
எத்தனை நாடுகளைப் பார்த்தவர்.. எத்தனை உயர்மட்ட விருந்துகளில் கலந்துகொண்டவர்.. எத்தனை நட்சத்திர ஹோட்டல்களில் இவருக்குப் பாராட்டு விழா நடந்திருக் கும்.. இவரது கணவருடன் எங்கெல்லாம் போய் உணவு அருந்தியிருப்பார்.. வீட்டில் எப்படி எல்லாம் விதம்விதமாக சமைத்து சாப்பிட்டிருப்பார்..!’

ஒரு நிமிஷம் நாம் உணர்வுகளில் கரைய, கண்களை நீர் மறைத்தது.
தூரத்தில் உணவு வண்டி தெரிந்ததும் அனைத்து நோயாளிகளின் அட்டெண்டர்களும் சுறுசுறுப்பாகத் தயாரானார்கள், க்யூவில் நிற்க!
‘‘தட்டைக் கொடுங்கம்மா.. நான் வாங்கிட்டு வரேன்..’’ என்றதும், ‘‘ஊஹூம்.. உன்னை அவருக்குத் தெரியாது.. புது ஆளுனு ரெண்டு சப்பாத்தி போட்ருவார்.. எப்போதும் வாங்கற ஆயா வாங்கினாதான் மூணு சப்பாத்தியும் நிறையக் கூட்டும் போடுவார்!’’ என்று பரிதவித்தார்!

அய்யோ.. கொடுமையே!

ஆயா கொண்டுவந்த தட்டில் சூடான சப்பாத்திகளைப் பார்த்ததும், பஞ்சடைந்திருந்த அந்தக் கண்களில் அப்படி ஒரு ஒளி! ஏதோ ஒரு வாரம் சாப்பிடாதவர் போல அவ்வளவு வேகமாக பிய்த்து வாயில் போட்டார். நாம் பாட்டிலில் இருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுக் காத்திருந்தோம்.

‘‘எனக்கு சுகர் இருக்கே! அதனால சர்க்கரை தொட்டுக்கக் கூடாது!’’ என்றவர் சாப்பிட்டு முடிக்க, தட்டை எடுத்துச் சென்று கழுவி வந்தோம்.
‘‘இது யாரு பாட்டி.. உங்க பேத்தியா?’’ - பக்கத்து பெட்டில் இருந்த அம்மா விசாரிக்க..

‘‘எங்க பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க..’’ என்று சந்தோஷமாக அறிமுகப்படுத்தினார்.

அந்த அம்மா நம்மைப் பார்த்து, ‘‘பாவம்மா இந்தப் பாட்டி.. ஏதாவது எழுதுவாங்க.. படிப்பாங்க.. சீஃப் டாக்டர்கிட்டே போய்ப் பேசிட்டு வருவாங்க.. மத்தபடி இவங்களைப் பார்க்க எப்பவாவது வர்ற ஒருத்தரைத் தவிர யாருமே வர்றதில்லம்மா!’’ என்றார்.

‘‘ஆமாம்மா.. இங்கே பாத்தியா.. எல்லா ‘பெட்’டுக்கும் அட்டெண்டர் உண்டு.. எனக்கு மட்டும்தான் யாரும் கிடையாது. அதேமாதிரி இங்கே யாருக்காவது என்னை மாதிரி முழுசா நரைச்சிருக்கா பாரு.. எல்லாம் சின்னப் பொண்ணுங்க.. அதுக்குள்ள ஏதேதோ வியாதி வந்து அட்மிட் ஆகியிருக்காங்க.. நான் ஒருத்திதான் இவ்வளவு வயசாகி, முதுமையினால இங்க வந்திருக்கேன்!’’ என்று சர்வசாதாரணமாகச் சொன்னபடி மீதமிருந்த பாலை வாயில் ஊற்றிக் கொள்கிறார் அம்மா.

‘‘எனக்கு யார் யாரோ உதவ வர்றதா சொல்றாங்கம்மா..என் தன்மானம் அதையெல்லாம் ஏத்துக்கறதுக்கு இடம் கொடுக்கலம்மா.. நான் அப்படி ஒரு வாழ்க்கை வாழலியே! இந்த நிலமையில அது தப்பு இல்லேன்னாலும் என் மனசு சம்மதிக்கலயே..’’ என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அம்மா, கீழே விழுந்ததில் எழுத வராமல் இருந்த தன் விரல்களுக்கு, இரண்டு குயர் பேப்பர் வாங்கித் தரச்சொல்லி எழுதி எழுதிப் பயிற்சி கொடுத்து, இப்போது ஒருவிதமாக, புரியும் அளவுக்கு எழுதுகிறார்.

டயரி முழுவதும் கவிதைகள். பணம், தேர்தல், தெருநாய், செவிலியர்கள் (அந்த மருத்துவமனை நர்ஸ்கள் பற்றி).. இப்படி எக்கச்சக்க கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துக் காட்டுகிறார்.
‘‘நேரமாயிடுச்சு போலயே! இருட்டிப் போயிடுச்சே! நீ எப்படிம்மா போவ? உங்க வீடு எங்கே இருக்கு?’’ - அக்கறையோடு கேட்கிறார். நமக்கோ அங்கிருந்து கிளம்பவே மனசில்லை.

‘‘சரிம்மா. பத்திரமா கிளம்பு.. இன்னிக்கு பொழுது எப்படி ஓடப் போகுதோ, பகவானே’னு நினைச்சிட்டிருந்தேன்.. பகவான்தான் உன்னை அனுப்பி இருக்கார்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ வந்தது... இதிலேயே நான் தூங்கிப் போயிடுவென்!’’ - என்றவரிடம் மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு!
தாளமுடியாத வலியுடன், அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வார்டை கடந்து படிகளில் இறங்கியபோது, கன்னங்களில் உருண்டது கண்ணீர்.

ச்சே...! என்ன வாழ்க்கை!

- நமது நிருபர்

May 3, 2009

முதுகு வலிக்கு செலவே இல்லாத வைத்தியம்

டாக்டர், எனக்கு 34 வயதாகிறது. முதுகுவலியால் கஷ்டப்படுகிறேன். டூ&வீலர் இல்லாமல் என்னால் வேலை பார்க்க முடியாது. நண்பர்களோ, வண்டி ஓட்டியதால்தான் இந்த முதுகு வலி என்கிறார்கள். முதுகு வலியை குணப்படுத்த ஏதாவது பயிற்சிகள் உள்ளதா?
- கே.எம். மஞ்சுநாத், பெங்களூர்.
டாக்டர் ஜெயலஷ்மி: ''டூவீலர் ஓட்டுவது, கம்ப்யூட்டர் முன்பாக அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்றவற்றால் பலருக்கு இப்போது முதுகு வலி ஏற்படுகிறது.
கைகளைப் போன்றே நமது கால்களிலும் உடலின் பிரதிபலிப்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. பாதத்தின் பக்கவாட்டுத் தோற்றம் நமது முதுகுத் தோற்றத்தை போலவே இருக்கிறது.
பாதத்தில் உள்ள புள்ளி களை வரிசையாக அழுத்தும் போது, எந்த புள்ளிகளில் அதிக வலி ஏற்படுகிறதோ, அந்தப் புள்ளிக்குரிய முதுகுப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டு கொள்ளலாம்.
காலை, மாலை இரு வேளைகளும் இந்தப் புள்ளிகளில் 14 தடவை அழுத்தம் கொடுத்துத் தளர்த்தி வரவும்.
ஒரு கட்டத்தில், காலில் உள்ள புள்ளிகளை அழுத்தும்போது, வலி இருந்த இடத்தில் வலி குறைந்திருப்பதை உணர்வீர்கள். அப்போது, முதுகு வலியும் நன்றாகவே குறைந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த மாத ‘மல்லிகை மகள்’ இதழ் பாருங்கள்!

May 2, 2009

வணங்குகிறேன்.. வரவேற்கிறேன்!


அன்பிற்கினிய வாசகப் பெருமக்களே..

வணக்கம்! ‘சுப வரம்’ என்னும் இந்த பச்சிளம் சிசுவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கும் தங்களுக்கு, முதலில் இதயங்கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். இனியதொரு இறை அனுபவத்துக்குள் பிரவேசிக்கும் முன்பு, உங்களோடு சில வார்த்தைகள்..

ஓர் ஆன்மிக இதழுக்கு இப்போது என்ன தேவை? எத்தனையோ நல்ல நல்ல ஆன்மிக இதழ்கள் இருக்கும்போது ‘சுப வரம்’ இதழுக்கான அவசியம் என்ன? இது என்ன புதிதாக சொல்லப் போகிறது?

இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் நிழலாடும்.

இளைய தலைமுறையும் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய வரவேற்கத்தக்க சூழலில், அவர்களுக்கு ஆன்மிகத்தை எளிய தமிழில், புரியும் வண்ணம் எடுத்துச் சொல்ல ஒரு ஆன்மிக இதழ் தேவைதான். விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று விதவிதமான திசைகளில் வெற்றிக்கொடி நாட்டினாலும், மனிதன் இறுதியில் சரண் அடைவது இறைவனின் பாதக் கமலங்களில்தான். அப்படியொரு அற்புதம் பற்றிச் சொல்ல எத்தனை நல்ல இதழ்கள் வந்தாலும் போதாதுதானே!

இதைத் தவிர, ‘சுப வரம்’ இதழுக்கு தனித்த நோக்கம் ஒன்றும் இருக்கிறது.

யானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் குட்டிக் கதை ஒன்று..

ஒரு பெருங்கடலில், சின்னஞ்சிறு அலை ஒன்று உருண்டு புரண்டு கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ‘ஐயோ, கரையை அடைந்ததும் என் வாழ்க்கை முடிந்துவிடுமே’ என்று கவலை கொள்கிறது. அந்த சமயம், பேரலை ஒன்று சீற்றத்துடன் இதன் பின்னே வர.. ‘ஐயய்யோ, இது என்னை விழுங்கப் போகிறதே.. என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா?’ என்று ஓலமிடுகிறது.

அப்போது அந்தப் பேரலை இதைப் பார்த்து கனிவோடு கூறுகிறது & ‘‘கவலைப்படாதே சிற்றலையே! நீ அழிந்துபோக மாட்டாய். நீ கண நேரமே தோன்றும் சின்னஞ்சிறு அலை மட்டுமே அல்ல. உன்னைப் படைத்த இந்தப் பெருங்கடலின் மாறுதலற்ற உண்மையான தண்ணீரே ஆவாய்! இந்தக் கடலே உன்னை, என்னை.. இன்னும் எத்தனையோ அலைகளை படைத்த கடவுள்! இந்தக் கடல், உன்னிடம், என்னிடம் மற்ற அலைகளில்.. என்று எங்கும் பரவி இருக்கிறது. உண்மையில் நீயும் தண்ணீர்தான். இந்தக் கடலும் தண்ணீர்தான். தண்ணீரான உனக்கு அழிவே இல்லை!’’

இதைச் சொன்ன தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், ‘‘கடலும் அலையும் உண்மையில் எப்படி ஒரே தண்ணீராகுமோ.. அப்படித்தான் இறைவனும் நீயும் உண்மையில் அளவற்ற ஒரே சைதன்யம் ஆவீர். சைதன்யமான உன்னிடத்தில்தான் இந்த அனைத்துலகும் இருக்கிறது. அதைப் படைத்த இறைவனும் இருக்கிறான்..’’ என்கிறார்.

ப்படியாக, ‘தெய்வம் நீ என்று’ உணரவைக்கும் முயற்சிதான் ‘சுப வரம்’! புற உலகின் தாக்கங்களால் தினம்தினம் பெருகிவரும் மனவேதனைகளை துடைத்து எறிய வைத்து, தளர்வறியா மனம் தரும் இதழாக இது விளங்கும். இந்த வாழ்க்கையே ஒரு வரம்தான் என்பதை உணர்த்தி, மகிழவைக்கும்.

இந்த முயற்சிக்கு உங்களின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். இதழை ஆழமாக படித்துப் பார்த்து, உங்களின் விமர்சனங்களால் தொடர்ந்து எங்களை வழிநடத்த வேண்டுகிறேன்.

இந்த இதழ் பற்றிய உங்கள் கருத்தறிய எங்கள் குழுவே ஆவலோடு காத்திருக்கிறது.

நன்றியுடன்

ம.கா.சிவஞானம்

ஆசிரியர்

பரவச யாத்திரை

சுபவரம் - அறிமுக இதழிலிருந்து..
அகோபிலம்.. ஆனந்தம்!
‘இயற்கை அழகோடு சேர்த்து இறை அனுபவமும் கிடைக்கவேண்டும்.. அதற்கு எங்கே போகலாம்?’ என்று யோசித்து, கடைசியில் நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் தான், ஆந்திராவிலுள்ள அகோபிலம்!
அகோபிலம் - தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம்! இங்கே நல்லமலா காட்டுக்குள் நரசிம்மமூர்த்திக்கு கட்டப்பட்டுள்ள ஒன்பது ஆலயங்கள்தான் விசேஷம்!
எட்டு பேர் குழுவாக, சென்னை கோயம்பேட்டில் இரவு பஸ் ஏறினோம். 9 மணி நேரப் பயணத்தில் நாங்கள் அடைந்த இடம் & நந்தியால் அருகிலுள்ள ‘அல்லக்கட்டா’. ஏகப்பட்ட தங்கும் விடுதிகளும், எங்கு பார்த்தாலும் டிராவல் ஏஜன்ஸிகளுமாக.. சகல சௌகரியமான ஊர்!
ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, குளித்து, சாப்பிட்டுவிட்டு ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். 2 மணி நேரப் பயணத்தில், அகோபிலம் நெருங்கிவிட்டோம் என்பதை அந்த ஜிலீர் காற்று அறிவித்தது.
அகோபிலம் மலையடிவாரத்தில், உள்ளூர் மக்கள் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் ஜூஸ் ஸ்டால்கள் வைத்திருக்கிறார்கள். அவரவர்க்குப் பிடித்த ஜூஸை குடித்துவிட்டு, ஆளுக்கொரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு மலையேற ஆரம்பித்தோம். ஒரு பையன் ‘கைடாக வருகிறேன்!’ என்றான். 150 ரூபாய் தர சம்மதித்து, அவனையும் கூட்டிக் கொண்டோம்.
நவ நரசிம்மர்கள் ஆங்காங்கே இருக்கிற மலைக் குன்றுகளில் தனித் தனியாக கோயில் கொண்டிருக் கிறார்கள். சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற மரங்களும், சுத்தமான குளிர் காற்றும் நம் கண்களை கட்டிப் போடுகின்றன.
முதல் மூன்று நரசிம்மர் கோயில்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் தோன்றியது. அருகே போனாலோ, செங்குத்தான, ஏறுவதற்கு சிரமமான படிக்கட்டுகள். அந்த மூன்று நரசிம்மர்களை தரிசிப்பதற்குள்ளேயே, எல்லாருடைய தண்ணீர் பாட்டில்களும் காலி! கைடாக வந்த பையன், அழகிய ஒரு ஓடையைக் காட்ட, அங்கே தாகத்தைத் தணித்துக் கொண்டு, அடுத்தடுத்த நரசிம்மரைத் தேடிப் போனோம்.
ஒரு நரசிம்மர் சந்நிதிக்கு அருகிலேயே ‘பிரகலாதா பாறை’ என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் பிரகலாதன் கல்வி கற்ற இடமாம்! கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் அளவிற்கு பரந்து கிடக்கிறது அந்தப் பாறை. அடர் ஆரஞ்சு நிறத்தில் மின்னுகிற அந்தப் பாறை முழுவதும் தெலுங்கு மொழியில் ஏதேதோ எழுதப்பட்டிருக்கிறது. அவை எல்லாம் பிரகலாதன் எழுதியவை என்கிறார்கள்.
அதற்கு மேல் நடக்க கால்கள் ஒத்துழைக்காததால், அறைக்குத் திரும்பிவிட்டோம். முதல் நாளில் 6 நரசிம்ம மூர்த்திகளைப் பார்த்திருந்தோம். அவை அனைத்தும் நாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்தன.
மலையின் அடிவாரத்திலேயே கோயில் சார்பில் இலவச உணவு வழங்கப்படுகிறது. மதிய சாப்பாடு தேவை என்றால் காலை 9 மணிக்கே இத்தனை பேருக்கு உணவு வேண்டும் என்று தெரிவித்துவிட வேண்டும். சுவையான சாப்பாடு!
மறுநாள், எஞ்சியுள்ள 3 கோயில்களை தரிசிக்கக் கிளம்பினோம். ‘மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் முழுவதும் காட்டிற்குள்ளேயே போக வேண்டும். சுமோ அல்லது ஜீப்பில் போவதாக இருந்தால் 11 கிலோ மீட்டர் வரை போகலாம். எப்படி இருந்தாலும் அடுத்த 3 கிலோமீட்டர் தூரத்தை நடந்துதான் கடக்கவேண்டும்’ என்றார்கள். எல்லாம் வல்ல எம்பெருமான் நாராயணனை தரிசிக்கப் போகிறோம்.. நாம் நடப்பதற்கான சக்தியை அவன் தராமலா போய்விடுவான்? எனவே, நடந்தே போவது என்று தீர்மானித்தோம்.
‘காட்டுக்குள் நிறைய கரடி வரும். அப்படி வந்தால், பயப்படாமல் மரங்களின் மீது ஏறிக் கொள்ளுங்கள். அவை பேசாமல் போய் விடும்’ என்று சிலர் எச்சரித்தார்கள். கொஞ்சம் பயத்துடனே தான் உள்ளே நடந்தோம். நல்ல வேளையாக கரடி எதுவும் எங்கள் கண்ணில் படவில்லை.
அடர்ந்த காட்டின் நடுவே இருந்த ஒரு நரசிம்மர் கோயில் அருகில் ஒரே மரத்தில் 20, 25 பெரிய தேன் கூடுகள் இருந்து, ரொம்பவே மிரட்டின.
அதன்பிறகு நாங்கள் அடைந்த இடம், பலி கொடுக்கும் நரசிம்மர் ஆலயம். கோயிலின் சுவர், தரை என எங்கு பார்த்தாலும் ரத்தத் திட்டுக்களும், ஆட்டு ரோமங்களுமாக நம்மை அச்சுறுத்தும் காட்சிகள்! இறுதியாக, நரசிம்ம ஸ்வாமி உக்கிரமாக ஹிரண்ய கசிபுவின் வயிற்றைக் கிழித்த இடத்தையும் பார்த்துவிட்டு திரும்பினோம்.
போக, வர என்று மொத்தம் 28 கிலோமீட்டர் நடை பயணம். எங்களில் சிலருக்கு செருப்பெல்லாம் கூட அறுந்துவிட்டது. ஆனாலும், களைப்பே தெரியவில்லை. அதுதான் ஆண்டவன் அருள் என்று புரிந்தது. பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நல்ல மழை வேறு. மலை மீது மழையில் நனைவது எத்தனை இதமான அனுபவம் என்பதை அப்போது தான் உணர்ந்தோம்.
அகோபிலத்திற்கு அருகிலேயே ஒரு சிவாலயமும் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளியே அமைந்திருக்கும் 32 அடி உயர பிரம்மாண்டமான நந்தி சிலை நம்மை மெய் மறக்க வைக்கிறது. இந்த சிவாலயத்திற்கு மிக அருகில், ஒரு அருவி கொட்டுகிறது. இந்த அருவி நீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாதாம். நாங்கள் வியந்து போய் நிற்க, ‘‘நீங்கள் சிவனில் நம்பிக்கை கொண்டிருந்தால், இது அவன் முடியில் இருந்து வருகிற கங்கை நீர். உங்களால் இதன் மூலத்தை அறிய முடியாது’’ என்றார், அங்கிருந்த ஒரு பெரியவர். அந்த மாவட்டம் முழுவதும் செழித்து வளர்கிற வாழைத் தோட்டங்களுக்கு, இந்த அருவி நீரே ஆதாரமாம்!
இறையும், இயற்கையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து, நம் எண்ணங்களை நல்ல வண்ணம் செதுக்குகிற ஒரு இடம்! திவ்யமாய் தரிசனம் கிடைத்த திருப்தியில், மனமகிழ்ச்சியோடு சென்னை வந்து சேர்ந்தோம்.
- லஷ்மி நாராயணன், சென்னை-33.
சதுரகிரி.. சந்தோஷம்!
என் மனதில் நீண்ட நாள் கனவாக, சதுரகிரி மலை ஏறி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ‘சதுரகிரி சென்று வந்தால் நினைத்த காரியம் நடக்கும்’ என்ற என் கொழுந்தன், அங்கே ஏழுமுறை சென்று வந்த அனுபவங்கள் பற்றியெல்லாம் விவரிக்கவும், அந்த ஆவல் இன்னும் அதிகரித்தது.
‘‘அடுத்த முறை செல்லும்போது சொல்லுங்கள்.. நாங்களும் வருகிறோம்’’ என்றேன் என் கொழுந்தனிடம். ‘‘உங்களால் மலை ஏற முடியுமா அண்ணி?’’ என்று அவர் கேட்டதற்கு, ‘‘மகாலிங்கமே துணை என்று ஏறுகிறேன்’’ என்றேன்.
அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாக, மதுரையிலிருந்து புறப்பட்டோம். சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் செய்து, தாணிப்பாறை என்ற இடம் வரை காரில் சென்றோம். அதன்பின் மலை ஏற வேண்டும். குடிப்பதற்கு நீரும், உணவும் அவரவர் பையில் எடுத்துக் கொண்டு, காலை ஆறரை மணிக்கு ஏற ஆரம்பித்தோம்.
எங்கள் குழுவிலிருந்த 15 பேரில் 6 பேருக்கு அதுவே முதல் பயணம்! பொதுவாக, எனக்கு கொஞ்சம் அதிகமாகப் படி ஏறினாலே மூச்சு வாங்கும். ஆஸ்துமா பிரச்னை உண்டு. அதனால் கொஞ்சம் மெதுவாகத்தான் ஏறினேன். என் கணவர், எனக்காக என்கூடவே மெதுவாக வந்தார்.
பயணம் ஆரம்பமாகும்போது, கறுப்பு, வெள்ளை நிறம் கலந்த ஒரு நாய் எங்கள் பின்னாடியே வந்தது. எனக்கு நாய் என்றாலே பயம். ஆனால், விரட்டினாலும் அது போகவில்லை. நாங்கள் ஏறமுடியாமல் உட்கார்ந்த இடமெல்லாம், அதுவும் அமர்ந்து கூடவே வந்தது. ‘பிலாவடி கருப்பர்’ என்ற கோயில் வரை வந்தது. பிறகு காணோம். அந்த இடத்திலிருந்து மகாலிங்கக் கோயில் மிக அருகில்தான்.
கூடவே வந்து காணாமற் போன அந்த நாய் என் மனதை உறுத்திக் கொண்டிருக்கவும், முன்பே சதுரகிரிக்கு வந்திருந்த என் உறவினர்களிடம் விசாரித்தேன். அப்போது அவர்கள் சொன்னதுதான் சிலிர்க்க வைத்துவிட்டது.
‘எப்போதும் புதிதாக முதன்முதல் மலை ஏறும் பக்தர்கள் வழி மாறிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக, துணைக்கு பைரவர் வடிவத்தில் சித்தர்கள் வருவார்கள்’’ என்றார்கள் அவர்கள். சித்தர்கள் வாழும் மலை என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்?
கிட்டத்தட்ட நாலரை மணிநேரம் ஏறிய பிறகு, அந்த அற்புத, ‘சுயம்பு’ லிங்கமான சுந்தர மகாலிங்கத்தை தரிசித்தோம். அதற்கு வலதுபுறம் சுமார் 200 படிகள் ஏறி ‘சந்தன மகாலிங்கத்தை’யும் தரிசித்தோம்.
அவ்வளவு உயரம் ஏறியும், எனக்கு அன்று ஆஸ்துமா பிரச்னை வரவில்லை. இரண்டு அற்புத லிங்கங்களை தரிசித்த பிறகு, ஏறிவந்த களைப்பும் தெரியவில்லை.
சுந்தர மகாலிங்கத்தின் தரிசனம் கண்டு நான் அடைந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. ஆண்டவன் கருணையை அனுபவித்து உணர்ந்தால்தானே தெரியும்!
- உமாபாண்டியன், மதுரை -8.
புண்ணிய தலங்களுக்கு சென்று நீங்கள் பெற்று வந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்!புண்ணிய தலங்களுக்கு சென்று நீங்கள் பெற்று வந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்!

Mar 31, 2009

உயிர்த்தெழுந்த சாந்தி


மல்லிகை மகள் ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை..

து 2006&ம் ஆண்டு, டிசம்பர் 9&ம் தேதி..

தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தில் வந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார் - தமிழகத்தின் தடகள வீராங்கனை சாந்தி!

கடுமையான பயிற்சியாலும், திறமையாலும் உலகளாவிய உயரத்தில் ஏறிய அந்தக் கிராமத்து பெண்ணை, ஏறிய அதே நாளில் அவ்வளவு உயரத்தில் இருந்து தலைகுப்புறத் தள்ளிவிடப்பட்டதுதான் கொடுமை!
‘பாலியல் சோதனையில் தோல்வி’ என்ற சிக்கல் எழுந்து, உலகமே பார்த்துக்கொண்டிருந்த அரங்கில்.. லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சாந்தியிடம் கொடுக்கப்பட்ட பதக்கம், பறிக்கப்பட்டது.

ஆனால், எந்தப் பெண்ணிடமிருந்து ‘பெண் தன்மை இல்லை’ என்ற காரணத்துக்காக பதக்கத்தைப் பறித்தார்களோ.. அதே பெண், இன்று பத்து ஏழை மாணவர்களை தன் பொறுப்பில் வைத்து ஒரு தாய்போல பராமரிப்பதோடு, 60 மாணவ, மாணவியருக்கு தடகளப் பயிற்சியும் அளிக்கிறார். ஓட்டப் பந்தயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர், 24 மணி நேரமும் பயிற்சி, பயிற்சி என்று ‘ஓடிக்’ கொண்டிருக்கிறார்!

‘‘எப்படி இருக்கீங்க சாந்தி?’’

‘‘நல்லா இருக்கேன்.. நிம்மதியா, சந்தோஷமா இருக்கேன். கடந்த ஒண்ணேகால் வருஷமா, இங்கே புதுக்கோட்டையில ‘அத்லெட்டிக் கோச்’ஆ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால நியமிக்கப்பட்டிருக்கேன். என்கிட்ட இப்ப அறுபது பசங்க பயிற்சி எடுத்துட்டிருக் காங்க.. ரன்னிங், ஜம்ப்பிங், த்ரோயிங்.. எல்லாத்திலேயும் பயிற்சி கொடுத்திட்டிருக்கேன்..’’

‘‘ஓட்டம்.. ஓட்டம்னு ஓட்டத்தையே உங்க மூச்சா நினைச்சுட்டிருந்த நீங்க, இந்த மாற்றத்தை எப்படி ஏத்துக்கிட்டீங்க?’’

‘‘என் மூச்சைத்தான் நிறுத்திட்டாங்களே, மேடம்!’’ என்று ‘சட்’டென்று கூற.. அந்தக் குரலின் வலியும் வேதனையும் நம்மை உலுக்கியது.

‘‘ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்படி, அப்படின்னு விளக்கிச் சொல்ல முடியாத சோகம் அது! என்னால ஏத்துக்கவே முடியாத ஒரு சூழ்நிலை! கிட்டத்தட்ட அது என் மரணம்! நான் எதைக் கனவு கண்டிருந்தேனோ, அந்தக் கனவு என் கைவசமாகி.. மறுநிமிஷமே கைவிட்டுப் போனது யாருக்கும் நடக்கக் கூடாத துரதிர்ஷ்டம்!

தொடர்ந்த முதுகுவலி காரணமா, ஏஷியன் கேம்ஸுக்குப் பிறகு நானே ஓடறதை நிறுத்தலாம்னுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனா, நான் நேசிச்ச ஒரு விஷயத்தை என்கிட்டருந்து வலுக்கட்டாயமா பிடுங்கிட்டாங்க.. என் கண்ணீரும் காயங்களும் கொஞ்ச நஞ்சம் இல்லை.. எல்லாரும் என்னென்னவோ பேசினாங்க.. ஏதேதோ எழுதினாங்க.. தோஹாவிலிருந்து வந்ததுக்கு அப்புறமும் அந்த சம்பவங்களும் அவமானமும் என்னை விரட்டினதாலதான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன்.. ஆனா, அதிலருந்தும் பிழைச்சப்பத்தான், ‘கடவுள் எனக்காக வேற ஏதோ வேலை வச்சிருக்கார்!’னு தோணுச்சு.

பழசையெல்லாம் மறக்க முயற்சி செஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்றேன்.. பரவாயில்லை.. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த உலகமும் சமூகமும் எனக்கு நல்லதுதான் செய்திருக்கு! இல்லேன்னா, நான் ‘கோச்’ ஆகியிருப்பேனா? வசதியில்லாத புள்ளைங்களுக்கு இப்படி பிராக்டீஸ் கொடுக்கற வாய்ப்புத்தான் கிடைச்சிருக்குமா? இப்ப என் ஆசையெல்லாம் என் புள்ளைங்க ‘அத்லெட்டிக்ஸ்’ல நல்லா வரணும்.. உலக அளவில சாதிக்கணும், மெடல் வாங்கணும்கிறதுதான்!’’ என்றவரின் குரலில், ஆரம்பத்தில் இருந்த தொய்வும் சோர்வும் போய், உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கியது.

‘‘உங்களுக்குத் தெரியுமா.. போன மாசம் நடந்த சென்னை மாரத்தான்ல அஞ்சு கிலோமீட்டர் பிரிவுல ஃபர்ஸ்ட் வந்தது ‘என்’ பையன்தான்.. பேரு வேணுகோபால். பத்தாயிரம் ரூபாய் கேஷ் பிரைஸ் வாங்கினான். அதே பிரிவுல தேர்ட் வந்ததும் முத்துக்குமார்&கிற ‘என்’ பையன்தான் . அது மட்டுமில்ல.. போபால்ல நடந்த தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத் தில் 300 மீட்டர் பிரிவுல, ‘என்’ பொண்ணு ராணி செகண்ட் வந்திருக்கா!’’ & சொல்லச் சொல்ல அப்படி ஒரு பெருமை அவர் பேச்சில்!

முதலிடம் பெற்ற மகனையும் மகளையும் பற்றி ஒரு தாய் எப்படிப் பூரிப்பாரோ, அதற்கு எள்ளளவும் குறைவில்லை அவரிடத்தில்! இந்தப் பிள்ளைகள் அனை வருக்குமே இப்போது சாந்தி ஒரு வளர்ப்புத் தாய்!

சாந்தியின் சொந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள கத்தக்குறிச்சி. பெற்றோர் சௌந்திரராஜன் & மணிமேகலை, செங்கல் சூளையில் கூலித் தொழிலாளிகள். மகளின் ஏற்றம், இறக்கம் & இதெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமே புரிபடாத அளவுக்கு வெகுளிகளாக, வெளியுலகம் தெரியாத அப்பாவிகளாக உள்ளனர்.

‘‘ஆனா, இப்ப அம்மாவும் அப்பாவும் அந்த அதிர்ச்சியிலேர்ந்து மீண்டு வந்துட்டாங்க.. ரொம்ப நார்மலா இருக்காங்க. ஏன்னா, என் லைஃப் இப்ப நார்மலா ஆயிடுச்சு இல்லையா? விளையாட்டில் மெடல்ங்கிறதுகூட அடுத்ததுதான்.. என் முதல் லட்சியமே என் தங்கை, தம்பிகளுக்கு மூணு வேளை நல்ல சாப்பாடு கொடுத்து, நல்லாப் படிக்க வைக்கணும்கிறதாதான் இருந்துச்சு! அதை ஓரளவுக்கு நிறைவேத்திட்டேன். பெரிய தங்கச்சி பாலிடெக்னிக் படிக்குது. அடுத்த தங்கச்சி 12&வதும் தம்பி 10&வதும் படிக்கிறாங்க.. இதுல ஒரு தம்பிக்கும் தங்கைக்கும் விளையாட்டுல நல்ல ஆர்வம் இருக்கு.. அவங்களையும் ‘அத்லெட்’&ஆ உருவாக்கணும்! பதக்கக் கனவு கனவாகவே இருந்தாலும்கூட, என்னோட இந்த லட்சியத்தை நனவாக்கற முயற்சியில நிச்சயமா வெற்றியடைஞ்சிடுவேன்னு தோணுது’’ என்கிறார், உறுதியாக.

தற்சமயம் புதுக்கோட்டையில் ஒரு வாடகை வீட்டில் இருக்கும் சாந்தி, தன்னிடம் பயிற்சி பெறும் ஏழை மாணவர்களுக்காக செய்திருக்கும் காரியம் பிரமிப்பூட்டுகிறது. மிகவும் வசதியில்லாத, ஆனால் விளையாட்டில் திறமை மிக்க சில மாணவர்களை தன் வீட்டிலேயே தங்க வைத்திருப்பதோடு, அவர்களுக்கு மூன்று வேளை உணவும் அளித்துப் பராமரிக்கிறார்!

‘‘உங்க வருமானத்துல இது சாத்தியமா சாந்தி?’’ என்றால், ‘‘நிச்சயமா இல்ல..’’ என்று சிரிக்கிறார்.

‘‘எனக்கு நிரந்தர வேலைகூட கிடையாது.. கான்ட்ராக்ட் தான்! சம்பளமும் கம்மிதான்! ஆனா.. அதையெல்லாம் நான் யோசிக்கல. இவங்கள்லாம் சுத்துப்பட்டுல இருக்கிற கிராமத்துப் பசங்க.. அப்பா, அம்மா வயல்ல கூலி வேலை செய்றவங்க. நல்ல சாப்பாட்டுக்கும் பயிற்சிக்கும் எங்க போவாங்க? அதான் இந்த இலவச ஹாஸ்டல், சாப்பாடு எல்லாம். நான் இந்த மாதிரி ஆரம்பக் கட்டத்துல இருக்கறப்போ எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை.. அதனால, எனக்குக் கிடைக்கற வருமானத்துல என்னால முடிஞ்ச வரைக்கும் செய்யலாம்னு இருக்கேன்.. முடியாதப்போ பார்த்துக்கலாம்!’’

‘‘வீட்டில் இத்தனை பேருக்கும் சமையல் யாரு?’’

‘‘வேற யாரு? நான்தான்.. காலைல ஆறு மணிக்கெல்லாம் கிரவுண்டுக்குப் போனா பிராக்டீஸ் முடிஞ்சு வர்றப்ப ஒன்பது மணி ஆயிடும்.. அப்புறம் இந்தப் பசங்களுக்கான சமையலை செஞ்சு முடிச்சிடுவேன்.. எல்லாரும் குளிச்சு, சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போவாங்க.. அப்புறம், ராத்திரி சாப்பாட்டை செய்து வச்சுட்டு ஈவனிங் பிராக்டீஸ்க்கு போவேன்.. பசங்க எல்லாம் நைட் வந்து சாப்பிட்டுப் படுப்பாங்க.. இதுவும் எனக்கு ஒரு குடும்பம்தான்!’’ என்னும் சாந்தி, ‘‘இந்தப் பசங்களுக்காக ஏதாவது பண்ணனும் மேடம்’’ என்கிறார், அந்த ‘ஏதாவது’க்கு அழுத்தம் கொடுத்து.

‘‘இவங்களைப் பெரிசா டெவலப் பண்ணனும். இன்னும் நாலஞ்சு வருஷத்துல என் பசங்கள்ல யாரையாவது ஒருத்தரை பெரிசா உருவாக்கி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி, நம்ம நாட்டுக்காக பதக்கம் வாங்கற வரைக்கும் ஓயமாட்டேன்.. இப்போதைக்கு எனக்குள்ள எரிஞ்சிட்டிருக்கற லட்சியம் அதுதான்!’’ என்றவரிடம், மெதுவாகக் கேட்டோம்.

‘‘உங்க சொந்த வாழ்க்கை பற்றி ஏதாவது திட்டம் வச்சிருக்கீங்களா? கல்யாணம் பற்றி...?’’ - நாம் முடிக்கும் முன்னரே பளிச்சென வருகிறது பதில்.

‘‘அதைப் பத்தி நினைக்கக் கூட இப்ப நேரமில்ல.. இப்ப என் வாழ்க்கை என் புள்ளைங்களைச் சுத்தித்தான்.. என் குறிக்கோள் எல்லாம் அவங்களை நல்லபடியா உருவாக்கணும்கிறதுதான்.. அதனால வேற எந்தச் சிந்தனைக்கும் திட்டங்களுக்கும் இடமில்லை.. ’’ - 27 வயதில் பெரிய அனுபவசாலிபோலப் பேசும் சாந்திக்கு, ஒரு வருத்தம்.. ஒரு ஆதங்கம்!

‘‘இவங்க எல்லாருமே வறுமையான குடும்பம் கிறதால, கிரவுண்டில் பிராக்டீஸ் பண்ணும்போது பேப்பர் போடுறவங்க வந்து, ‘வீடு வீடாப் போய் பேப்பர் போடு.. மாசம் 500 ரூபா தர்றேன்’னு கூப்பிட்டாப் போயிடறாங்க.. ரெண்டு மூணு பசங்க போயிட்டாங்க. என்னால தடுக்க முடியல.. ஏன்னா, என்னால அந்த 500 ரூபாயைக் கொடுக்க முடியாதே! அதேபோல, இந்தப் பிள்ளைங்களை ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போட்டிகளுக்கெல்லாம் நானே கஷ்டப்பட்டு அனுப்பிடறேன்.. ஆனா, இவங்க திறமை அதோட நின்னுடக் கூடாது.. உலகளவில் இவங்களை வெளிய கொண்டுவரணும்னா, அதுக்கு நிறையப் பணம் செலவழிக்கணும். எனக்கு அனுபவமும், பயிற்சி கொடுத்துக் கொண்டுவரக்கூடிய நம்பிக்கையும் இருக்கு.. ஆனா பண வசதி இல்லையேனு ரொம்ப வருத்தமா இருக்கு..! இருந்தாலும், எப்பாடுபட்டாவது நான் இழந்த பெருமையை, என் பிள்ளைங்க மூலமா இந்த தேசத்துக்குப் பெற்றுத் தரணும்கிறதுல உறுதியா இருக்கேன்!’’

இவருடைய உண்மையான அக்கறையும், தீயாய்க் கனன்று கொண்டிருக்கும் வெறியும், நிச்சயம் ஒரு நல்ல விளையாட்டு வீரரை இந்த தேசத்துக்கு உருவாக்கித் தரும். அப்போதுதான் இந்தத் ‘தாயின்’ மனதுக்கு ஒரு ‘சாந்தி’ கிடைக்கும்!

- பிரேமா நாராயணன்

Mar 28, 2009

நம் வாழ்க்கை நம் கையில்

ஏப்ரல் 2009இதழின் தலையங்கம்..
யதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்?!

Mar 9, 2009

தலைவாசல்

மல்லிகை மகள் - மார்ச் இதழின் தலையங்கம்..
ஏரியாக இருப்போம்!
வாழ்க்கைத் துயரங்களால் வலி கொண்ட ஒரு இளைஞன், தன் பழைய ஆசிரியரை நாடிச் சென்றான். தான் அனுபவிக்கும் வேதனைகளை எடுத்துச் சொன்னான்.
ஆசிரியர் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. கை நிறைய உப்புத் தூளை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடச் சொன்னார். பிறகு, அந்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். சில துளிகள்கூட குடிக்க முடியாமல் அவன் தவிக்க..
‘‘எப்படி இருக்கிறது இதன் சுவை?’’ என்று கேட்டார் ஆசிரியர்.
‘‘ஐயய்யோ.. வாயிலேயே வைக்க முடியலை சார்!’’ - முகம் சுளித்தான் இளைஞன்.
புன்னகைத்துக் கொண்ட ஆசிரியர், இன்னொரு கைப்பிடி உப்புத்தூளை எடுத்துக் கொள்ளச் சொல்லி, அருகிலுள்ள ஒரு ஏரிக்கு அவனை அழைத்துச் சென்றார். அந்த உப்புத்தூளை ஏரியில் போடச் சொன்னவர், பிறகு அந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கச் சொன்னார். எந்தவித சங்கடமும் இன்றி அவன் அந்தத் தண்ணீரைக் குடிக்க..
‘‘எப்படி இருக்கிறது இதன் சுவை?’’ என்று கேட்டார்.
‘‘ம்.. நன்றாகவே இருக்கிறது!’’
‘‘உவர்ப்புச் சுவையை உணர்கிறாயா?’’
‘‘ம்..ஹூம்.. அது தெரியவே இல்லை..’’ - சந்தோஷமாக சொன்னான் இளைஞன்.
இப்போது அவன் அருகில் அமர்ந்து, அவன் கரங்களை ஆதரவாக எடுத்து வைத்தபடி ஆசிரியர் சொன்னார் - ‘‘வாழ்க்கையின் வலி என்பது இந்த கைப்பிடி உப்புத்தூள் போன்றதுதான். அதிகமும் இல்லை. குறைவும் இல்லை. அந்த வலி என்பது எப்போதும் மாறாமல் ஒரே அளவோடுதான் உள்ளது. ஆனால், அந்த வலியை நாம் உணர்வது என்பது, நாம் அதை வைத்திருக்கும் மனசின் விசாலத்தைப் பொறுத்தது. அதனால், வாழ்க்கை வலிகளால் கஷ்டப்படும்போது, நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உன் மனசை விசாலப்படுத்திக் கொள்வதுதான். டம்ளர் தண்ணீராக இருக்காதே. ஏரியாக இரு!’’
உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தில் ஆங்காங்கே வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என்று பாதிப்புகள் பரவ.. அது எல்லோரது வாழ்விலும் பல்வேறு அம்சங்களில் எதிரொலித்து, வலிகளை உருவாக்கியபடி இருக்கின்றன.
இந்த நேரத்தில் நாம் பின்பற்றவேண்டிய மந்திரச் சொற்கள் இதுதான்.. ‘‘ஏரியாக இருப்பேன். டம்ளர் தண்ணீராக அல்ல!’’

Mar 1, 2009

உங்கள் வீட்டில் பணம் செழிக்க.. இருபத்தைந்து வழிகள்

மார்ச் 09 இதழிலிருந்து ஒரு கட்டுரை..
டந்த சில மாதங்களாக உலகளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் பயமுறுத்தி வருகிறது. இன்று இருக்கும் வேலை, நாளை இருக்குமா என்ற சந்தேகத்திலேயே பலர் நாட்களை கடத்துகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுப்பது சேமிப்பு பழக்கம்தான்! சேமிப்பு என்பது பணம் மட்டுமல்ல.. அது பல வழிகளிலும் இருக்கலாம். இதோ, நிரூபிக்கப்பட்ட 25 ரகசியங்கள்..

1. வங்கிகளில் இருக்கும் பணம்..
சாதாரணமாக சேமிப்பு என்றதும், வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணம் போட்டு வருவதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சேமிக்கும் பணம் முழுவதும் சேமிப்புக் கணக்கிலேயே இருந்தால் அது எந்தவிதமான பயனையும் தராது. அவசரத் தேவைக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடுவதுதான் உத்தமமான காரியம். அது, அதிக வட்டி மற்றும் வருமானத்தைப் பெற்றுத் தருவதால் பணம் பெருக வழி வகுக்கும். பல வங்கிகளில் ‘ஃப்ளெக்ஸி டெபாசிட்’ என்று உள்ளது. அதில் போட்டு வைத்தால் அவர்களே நிரந்தர வைப்புக் கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்.
2. ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
மாதாமாதம் ஒரு சிறிய தொகையை ரெகரிங் டெபாசிட்டில் போட்டால் அது வளரும் விதத்தைப் பார்த்தால், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிறிய உதாரணம்.. ‘மாதம் 500 ரூபாய் 20 வருடத்திற்கு போட்டு வருவீர்கள்; அது 10 சதவீதம் வட்டி பெறுகிறது’ என்று வைத்துக்கொண்டால், அந்த 20 வருடம் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 3,78,000 ரூபாய்-. நம்ப முடிகிறதா? சேமிப்புக்கு ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
3. ஆன்லைன் வங்கி வசதியை பயன்படுத்துங்கள்!
பல வங்கிகளில் ஆன்லைன் பாங்கிங் வசதி உள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு விட்டால் அதன் மூலமாகவே கிரெடிட்கார்டு பில், டெலிபோன் பில், எலக்டிரிசிட்டி பில் போன்ற பல பில்களையும் கட்டிவிடலாம். இதனால், செக் எழுதி அதைக் கொண்டு போய் போட ஆகும் போக்குவரத்து செலவு, கியூவில் நிற்கும் நேரம்.. எல்லாமே மிச்சம்!
4. வங்கிக் கடனில் வாங்குங்கள் வீடு!
வீடு வாங்குவது என்றால், வங்கிக் கடன் பெறுவது நல்லது. அதன் வட்டியின்மீது கிடைக்கும் வருமான வரிச் சலுகையே ஒரு வகையில் பெரிய ஒரு சேமிப்புதான்!
5. மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் அவசியம்!
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் எடுத்திருந்தால் நலம். இல்லாவிடில் கட்டாயம் இன்ஸ்யூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் இல்லாத பட்சத்தில் இன்றைய சூழலில் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் காலம் காலமாக சேமித்து வைத்திருந்த பணமெல்லாமே காணாமல் போகிவிடும். உஷார்! மேலும், இதற்காக செலுத்தும் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியம் தொகைக்கு 15,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகையும் கிடைக்கும்.
6. கிரெடிட் கார்டில் கவனம் தேவை!
கிரெடிட் கார்டு வைத்திருப்பதால் உள்ள பலன்கள், அதன் டியூ கட்டுவதில் ஒரு முறை தாமதமாகி அபராதம் கட்டினாலே காலியாகி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு செலவுகளை தனியாக எழுதி வைத்து, மாதம் ஒரு முறை அதற்கான தவணை தேதிக்கு முன்னர் கட்டிவிட மறக்கவேண்டாம்.
7. காய்கறி, மளிகை சாமான்கள்..
நமது மாதாந்திர பட்ஜெட்டில் முக்கிய இடம் பெறுவது காய்கறி, மளிகை சாமான்கள் தான். அதில் மிச்சம் பிடித் தாலே நிறைய ரூபாய் சேமிக்க முடியும். சோம்பேறித்தனம் காரணமாக, விலை சிறிது அதிகம் இருந்தாலும் அருகில் உள்ள கடைகளிலேயே காய்கறிகள் வாங்குகிறோம். இதில் தினசரி 3 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறோம் என்றாலும், வருடத்திற்கு 1. ,080 ரூபாய் நஷ்டம்! இதையே 25 வருடங்களுக்கு வட்டியோடு கணக்கு போட்டால்.. மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வரும். நடந்துசென்று அருகிலுள்ள மார்க்கெட்டில் வாங்கினால் பர்ஸுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது.
8. லிமிடெட் பிக்னிக்!
இன்றைய இளைய தலைமுறை ஒவ்வொரு வார இறுதியிலும் பிக்னிக் செல்வது, அதுவும் தங்களுடைய சொந்த பைக் அல்லது கார்களிலேயே செல்வது வாடிக்கையாகி விட்டது. பிக்னிக் வேண்டாம் என்பதில்லை. வாரம் ஒரு முறை என்பதை மாதம் ஒரு முறை என்று மாற்றிக் கொள்ளலாம். அதுவே நல்ல சேமிப்பை தரும்.
9. நடக்கலாம்..தப்பில்லை!
தற்போது சிறிய தூரத்திற்குகூட ஆட்டோ என்று கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டோம். பஸ்சுக்குகூட நிற்பதில்லை. குறைந்த தூரத்திற்கு நடை.. சிறிது அதிகமான தூரத்திற்கு பஸ் என்று பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதேசமயம், மூன்று பேர் போகும்போது ஆட்டோவில் செல்லலாம். 6 அல்லது 7 பேர் என்றால் கால் டாக்ஸியும் தவறில்லை.
10. பிராண்டட் சட்டையா..?
பெரிய கடைகளில் அட்டைப் பெட்டி களில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் பிராண்டட் சட்டைகளின் அழகில் அதன் அதிகபட்ச விலையை மறந்து விடுகிறோம். ஏன் கடையில் துணிகள் வாங்கி, தைத்து உடுத்தக் கூடாது. அது பெரிய அளவு சேமிப்பைத் தரும். ரெடிமேட் தான் எடுப்பேன் என்றால், தள்ளுபடி விற்பனைகளை கவனித்து எங்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது என்று பார்த்து வாங்குங்கள் (தள்ளுபடியில் வாங்குவது எல்லாம் மட்டமான சரக்கு என்ற எண்ணம் வேண்டாம். அதிகப்படியான சரக்குகள், தையலில் ஏற்பட்ட சிறிய தவறுகள் போன்று உள்ள ரெடிமேட் ஆடைகள்தான் தள்ளுபடி விற்பனைக்கு பெரும்பாலும் வரும்). தற்போது 50 சதவிகிதம் வரை தள்ளுபடியில் பல கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. அவற்றைத் தேடிப்பிடித்து வாங்குவது உசிதம்.
11. குழந்தைக்கு டிரெஸ் வாங்குகிறீர்களா?
குழந்தைகளுக்கு துணிமணிகள் வாங்கும்போது அவர்களையும் கூட்டிச் சென்று வாங்குவதுதான் உத்தமம். இந்தக் கால குழந்தைகள் முன்பு போல இல்லை. தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போடவே மாட்டார்கள். எதற்கு அநாவசிய செலவு?
12. கரன்ட் பில் ஷாக் அடிக்குமே!
கரன்ட்டை தொட்டால்கூட பலருக்கு ஷாக் அடிக்காது. மாதா மாதம் கரன்ட் பில் வந்தவுடன்தான் ஷாக் அடிக்கும். தேவையற்ற விளக்குகளை அணைத்து விடுவதே, பெரிய சேமிப்பை தரும். கிராமப் புறங்களில் மாடுகள் வைத்திருப்பவர்கள் கோபர் கேஸ் (சாண எரிவாயு) அமைத்து இன்னும் எரிபொருள் செலவுகளை மிச்சப் படுத்தலாம். ப்ளாட்டுக்களில் குடியிருப்பவர்கள் ‘சூரிய சக்தி’ பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். இவற்றுக்கு அரசாங்க மானியங்களும் கிடைக்கின்றன.
13. டெலிபோன் உபயோகிக்கும்போது..
தற்போது குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போடுவதில் போன் பில்லுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆளுக்கு ஒரு மொபைல் போன்.. ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலே பத்து போன் கால்கள்.. பில் எகிறாமல் என்ன செய்யும்? போன் செய்யும் முன்பு அந்த கால் அவசியம் தானா என்று யோசியுங்கள். வெளிநாடுகளுக்கு போன் செய்வதாக இருந்தால், இன்டர்நெட் மூலமாக பேசுவது செலவை குறைக்கும். இணைய பரிச்சயம் உள்ளவர்கள் முடிந்த அளவு ஈமெயில் பயன்படுத்தலாம். சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகக் கூறவும் முடியும். செலவும் குறைவு.
14. புதிய ஃபர்னிச்சர் வாங்கப் போகிறீர்களா?
முன்பெல்லாம் வீட்டுக்கு பர்னிச்சர் வாங்குவது என்றால், அது காலா காலத்துக்கும் வரவேண்டும் என்று நினைப்போம். தேக்கு, கருங்காலி, ரோஸ் வுட் என்று பார்த்துப் பார்த்து வாங்கி, அதை நமது ஆசாரி ஒவ்வொரு இழையும், இழைக்கும்போதும் அருகில் இருந்து கவனிப்போம். இந்த வேகமான காலத்தில் நமக்கு ஆசாரி பின்னால் செல்ல நேரம் இல்லை. நமது ஆசாரி என்று சொல்லப் படுபவரும் தற்போது யாருக்கும் இல்லை. குறைந்தபட்சம் அடுத்த ஃபர்னிச்சர் வாங்கும்போதாவது, ‘வாங்கும் ஃபர்னிச்சர் ஐந்து வருடம் உழைத்தாலே போதும்; மறுபடி புதியது வாங்கிக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தையாவது துறந்துவிட்டு, காலத்திற்கும் உழைக்குமா என்று பார்த்து வாங்குங்கள்.
15. வீட்டு வாடகையில் வருவாய்!
தற்போது போக்கு வரத்து வசதிகள் எவ்வளவோ மேம்படுத்தப்பட்டிருக் கின்றன. அதை வைத்து வீட்டு வாடகையைக் குறைக்கலாமே! சென்னையைப் பொறுத்தவரை, மின்சார ரயில்கள் நகரின் கடைசி வரை இணைக்கின்றன. நகரின் மத்தியில், ரயில் நிலையத் திலிருந்து தள்ளி குடியிருக்கிறீர்கள் என்றால், நகரின் கடைசிக்கு.. ஆனால், ரயில் நிலையத்துக்கு அருகில் வீட்டை மாற்றிக் கொள்வது நல்லது. நகரின் கடைசியில் இருந்தாலும், அந்த வீடு ரயில் நிலையத் திற்கு அருகிலேயே இருப்பதால், போக்கு வரத்து செலவு, பயண நேரம் இரண்டிலும் ஒரே செலவாகத்தான் இருக்கும். ஆனால், அங்கு நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகை குறைவாக இருக்கும். அது எவ்வளவு சேமிப்பை தருமே!
16. கையில் கூடுதலாக பணம் இருக்கிறதா? கடன்களை திருப்பிச் செலுத்துங்கள்!
கையில் அதிகப்படியான பணம் இருக்குமானால் வாங்கிய கடன்களை அடைப்பது நல்லது. கடன்கள் குறைந்தால் மனதில் சுமை குறையும். பணத்தை கையில் வைத்துக் கொள்வது மட்டுமல்ல.. கடனை அதிக வட்டியில் வைத்துக் கொள்வதும் ஆபத்துதானே!
17. விருந்துகள்.. வீட்டில் நடக்கட்டுமே!
‘நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறேன்’ என்பது ஒரு பெரிய செலவுதான். பிறந்த நாள், கல்யாண நாள் என்று. ஏன் இவற்றையெல்லாம் வீட்டிலேயே கொண்டாடி மகிழக் கூடாது. வருபவர்களுக்கு ஏன் வீட்டிலேயே சமைத்து பரிமாறக் கூடாது. செலவும் குறைவு. வருபவர்கள் வயிறும் குளிர்ந்து உங்கள் சமையல் திறமையையும் பாராட்டுவார்களே! அதோடு, அலுவலகத்துக்கு செல்லும்போது கையில் ‘லன்ச்’ கொண்டு செல்லுங்கள். ‘வெளியில் சாப்பிட்டுக்கறேன்’ என்று போனால், அது பெரிய அளவில் செலவை இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது.
18. வெஜிடேரியனா? நான்&வெஜிடேரியனா?
‘நான்&-வெஜிடேரியன்’ என்றால் வெஜிடேரியனுக்கே மாறிவிடுவது சேமிப்புக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. மாற முடியாதவர்கள் வாரம் ஒருமுறை தான் ‘நான்-வெஜ்’ என்று ஒரு எல்லை வைத்துக் கொள்ளலாம்.
19. தவிர்க்க முடியாத பள்ளிக் கட்டணம்!
பிள்ளைகளின் பள்ளிக் கட்டணங்கள் தவிர்க்க முடியாதவைதான். உங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து, அங்கே கட்டணங்கள் அதிகரித்து வரும் வேளையில், பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்குகளில் அந்தக் கட்டண உயர்வு பற்றி கூற மறக்காதீர்கள். அது அந்த நிர்வாகத்தை ‘இரண்டு பேர் கேள்வி கேட்கிறார்களே’ என்று கவனிக்க வைக்கும். கட்டணங்களை கூட்டும் முன்பு சிறிதாவது யோசிப்பார்கள்.
20. கடன் வாங்கி முதலீடா?
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய என பலர் கடன் வாங்குகிறார்கள். தற்போது உலகளவில் பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் கடன் வாங்கி முதலீடு செய்வது அத்தனை உகந்ததல்ல.
21. டியூசன் எடுக்கலாமா?
சில இல்லத்தரசிகள் நன்கு படித்து வேலை பார்க்காமல் இருக்கலாம். டியூசன் எடுப்பது அவர்களுக்கு ஒரு நல்ல பார்ட் டைம் வேலை! பெரிய நகரங்களில் சப்ஜெக்ட் வாரியாகவே டியூசன் எடுக்கிறார்கள். எந்த சப்ஜெட்டில் உங்கள் நீங்கள் திறமைசாலியோ அந்த சப்ஜெட்டை எடுக்கலாம். டியூஷன்தான் என்றில்லை.. பொழுதுபோக்காக நீங்கள் கற்று வைத்திருக்கும் விஷயங்களை அசைபோட்டு பாருங்கள்.. அதிலேயே கூட அட்டகாசமான வருவாய் தரும் சூட்சுமம் ஒளிந்திருக்கும்.
22. குழந்தைகளுக்கு சேமிப்பை கற்றுக் கொடுங்கள்!
நீங்கள் சேமிப்பதோடு உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியதும் முக்கியம். அவர்களுக்கு மாதாமாதம் தேவையான அளவு பணம் கொடுத்து அவர்களின் செலவுகளை அவர்களையே செய்துவரச் சொல்லுங்கள். இது நிச்சயமாக நல்ல பலன்களை தரும். நீங்கள் அசந்துபோகும் அளவுக்கு நிறைய சேர்த்து வைத்திருப்பார்கள்!
23. அடுத்தவர் என்ன நினைப்பார்?
அடுத்தவர் என்ன நினைப்பார் என்ற நினைப்பிலே நாம் பெரும்பாலும் அதிகம் செலவழிக்கிறோம். அதைத் தவிர்த்தாலே ஒரு பெரிய சேமிப்பு ஏற்படும்.
24. செலவு செய்யும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள்!
எந்த செலவையும் செய்யும் முன்பு ‘இது தேவையான செலவுதானா?’ என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். தேவைப்படாத எந்த ஒருபொருளையும் மிகமிக குறைந்த விலையில் கிடைத்தாலும் வாங்காதீர்க்ள். அதேபோல், எந்த ஒரு செலவிலுமே நம் தேவைக்கு சிறிதும் குறைவு வைக்காத.. ஆனால் சேமிப்பை தரும் விஷயங்கள் இருக்கின்றன. கவனித்து செயல்படப் பாருங்கள்!
25. கிரியேட்டிவ்&ஆக இருங்கள்!
எந்த ஒரு விஷயத்திலும் கிரியேட்டிவ்வாக இருப்பதே ஒரு வகையில் சேமிப்பைத் தரும். ‘அவுட்டிங்’ போவதற்கு பதிலாக வீட்டிலேயே குடும்பத்தினரோடு புதுமையான ‘இன்டோர்’ கேம்ஸ் விளையாடுவது, எல்லாவற்றையும் குப்பை என வெளியே தள்ளாமல் அதில் பயன்படுத்த வழிகள் பார்ப்பது.. இவற்றாலும் வீட்டில் பணம் செழிக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்

Jan 8, 2009

வாழ்க்கையை கொண்டாடு - 8


ஓஷோ



தமிழில்:

சித்தார்த்தன்



பெண்ணும் ஆண்தான்!

ஆணும் பெண்ணும்தான்!


என் மகளை வீடு பெருக்கித் துடைக்கச் சொன்னாலோ, துணிகளைத் தோய்க்கச் சொன்னாலோ, ‘அதையெல்லாம் அண்ணனைச் செய்யச் சொல்வதுதானே?’ என்று கோபமாகக் கத்துகிறாள். என் கணவரும், மகனும் சாப்பிட்ட தட்டுகளைக்கூட தேய்க்க மறுக்கிறாள். ‘இதெல்லாம் பெண்கள் செய்யவேண்டிய வேலை’ என்று என் கணவர் சமாதானமாகவும், மிரட்டலாகவும் சொல்லிப் பார்த்துவிட்டார். திருந்தமாட்டேன் என்கிறாள். பெண் என்பவள் ஆணிடம் அடங்கித்தான் போக வேண்டும் என்று அவளுக்குப் புரிய வைப்பது எப்படி?


புரியவைக்க வேண்டியது உங்கள் மகளுக்கு அல்ல. உங்களுக்குத்தான்!

ஒரு நாள், கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த யானை ஒன்றைப் பார்த்தேன். அதன் முன்னங்காலில் கட்டப்பட்டிருந்த கயிறு மிக மெல்லியது. வேறு எந்தச் சங்கிலியாலும் அது கட்டிப் போடப்பட்டிருக்கவில்லை. எந்தக் கூண்டிலும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

யானைக்கு அந்தக் கயிறு ஒரு பொருட்டே இல்லை. எந்த விநாடியும் அறுத்துக்கொண்டு போக முடியும். ஆனாலும், அது கயிற்றை அறுத்துக்கொண்டு போக முயற்சிக்கவில்லை.

அருகில் நின்றிருந்த பாகனிடம், ‘‘இவ்வளவு பிரம்மாண்டமான யானை எவ்வளவு நேரமானாலும் பொறுமையாக இங்கேயே நிற்கிறதே.. ஏன் அது கயிற்றை அறுத்துக் கொண்டு போக முயற்சிப்பதில்லை?’’ என்று கேட்டேன்.

யானைப்பாகன் பெருமிதமாக, ‘‘குட்டியாக இருக்கும்போதே இந்த சைஸ் கயிற்றால் இதன் காலைக் கட்டிப் போட்டு விடுவோம். குட்டியால் அதை அறுத்துக் கொண்டு போக முடியாது. வளர, வளர தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு போக முடியாது என்ற எண்ணம் யானையின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அதனால்தான், வளர்ந்த பின்னும் தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக் கொண்டு போக அது முயற்சி செய்வது இல்லை!’’ என்றான்.

கயிற்றை அறுத்துக் கொண்டு போகும் வலிமையைப் பெற்றிருந்தாலும், அதனைத் தன்னால் அறுக்க முடியாது என்று சிறு வயதிலிருந்தே நம்பிக் கொண்டிருப்பதை யானையால், வளர்ந்த பின்பும் மாற்றிக் கொள்ள இயலவில்லை. பெண்களும் யானைகள் போல்தான்! சிறு வயதிலிருந்தே ஆணைவிடப் பெண் தாழ்ந்தவள் என்று மாற்றி மாற்றிப் போதிக்கப்பட்டதால், அவளும் கயிற்றினை அறுத்துக்கொண்டு போகாத யானையாக மாறிவிட்டாள்.

ணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருக்கும் வேற்றுமைகள் மிகச் சில! அவையும் உடல் ரீதியானவை மட்டுமே!

மற்றபடி அவர்களிடையே இருப்பதாக நினைக்கும் முரண்பாடுகள் அனைத்தும் கற்பனையானவையே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமுதாயக் கட்டுப்பாடுகளினால் உருவாக்கப்பட்டு, ஆண்களின் சுயநலம் காரணமாகத் தொடரப்படுபவையே.

உயிர்கள் வாழ்ந்து, பெருகி, தழைப்பது என்பது வாழ்க்கையின் அடிப்படையான நியதி. ஓர் உயிரை உருவாக்கி, உலகை மேம்படுத்தும் பெரும் பணிக்கு இயற்கை தேர்ந்தெடுத்திருக்கும் உயர் சக்தியே பெண்தான்.

மனித இனம் மட்டுமல்ல, உலகில் இயங்கும் ஜீவராசிகள் அனைத்தும், அவற்றின் பெண் பாலரின் மூலம்தான் பல்கிப் பெருகி வாழ்கின்றன. உயிர் உற்பத்தியில் ஆணின் பங்கு மிகக் குறைவு.

அடுத்தது, அன்பு எனும் பெரும் பண்பு!

பெண்மையும், அன்பும் இணை பிரியாமல் பின்னிப் பிணைந்தவை.

பெற்றெடுப்பதால் மட்டுமே ஓர் உயிர் வாழ்ந்துவிடுவதில்லை. அந்தச் சின்னஞ்சிறு உயிரின் பசி, தாகம் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பாசம், பரிவு என்னும் மனரீதியான தேவைகளையும் நிறைவேற்றும் பெரும் பொறுப்பு பெண்ணிடம்தான் அளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், இவை அன்பெனும் உணர்வால் மட்டுமே நிறைவேற்றப் படக் கூடியவை; அந்த அன்பை எந்தத் தயக்கமுமின்றிப் பொழியும் திறன் பெண்ணிடம் மட்டும்தான் உள்ளது!

அன்பு காட்டுவதும், அதைச் சேவையாக மலரச் செய்வதும் பெண்களின் இயற்கையான குணங்கள் என்ற ஒரே காரணத்தினால் தான் நோயாளிகளைப் பேணும் நர்ஸ், இளம் குழந்தைகளை வளர்க்கும் தாதியர், குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர், சமுதாய முன்னேற்றத்துக்காக உழைக்கும் சேவகிகள் ஆகிய சேவைப் பணிகள் அனைத்திலும் பெண்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

வாழ்க்கையை சொர்க்கமாக்கும் உணர்வுகளான பாசம், பரிவு, பொறுமை.. இவை அனைத்தும்கூட பெண்மைக்கே உரித்தான பெரும் சொத்துக்களாகும். தான் இருக்கும் இடத்தையும், உடன் வாழும் மனிதர் களையும் வளமாக வாழச்செய்யும் பெரும் சக்தி அவள்!

ஆனால், இவை அனைத்துக்கும் பிரதிபலனாக அவளுக்குக் கிடைப் பது என்ன? சமூகத்தில் உயரிய ஒரு நிலையா? இல்லை, அவளால் பயன்பெற்ற ஆண்களின் மனங்களில் பெருமிதமான ஓர் இடமா?

இரண்டும் இல்லை என்பதுதான் சோகமானதொரு உண்மை!

பெண் பல விதங்களிலும் சிறந்தவள் என்று உணர்ந்து அச்சம் கொண்ட ஆண், அவளைவிட தான்தான் உயர்ந்தவன் என்று நிரூபித்துக்கொள்ளும் மோசமானதொரு முயற்சியில் இறங்கினான். அவளுடைய ஞானம், திறமை, அறிவு அனைத்தையும் கட்டுப்படுத்தி, அவளுடைய சுதந்திரத்தை அழித்து, ‘பெண் என்பவள் ஆணுக்கு அடிமை’ என்ற நிலைக்குத் தள்ளினான்.

இதற்குத் துணையாக ‘உடல் வலிமையில் பெண், ஆணைவிடக் குறைந்தவள்’ என்ற இயற்கை நியதியையும் தந்திரமாக, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

அப்படியெனில், அதிக உடல் வலிமை கொண்ட விலங்குகள், மனித இனத்தைவிட உயர்ந்தவை என்றா கருத முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவன் தயாராக இல்லை.

வெளியே போயிருந்த மனைவி வீட்டு வாசலில் நின்று, கதவைத் திறக்குமாறு கத்தினாள். அதே நேரம் வீட்டின் பின்புறக் கதவுக்கு வெளியே வளர்ப்பு நாய், தன்னை உள்ளே விடும்படி குலைத்தது.

கணவன் வீட்டின் பின் கதவைத் திறந்து நாயை முதலில் உள்ளே வர அனுமதித்தான். ஏன் தெரியுமா? வீட்டுக்குள் வந்த பின் நாய் குரைப்பதை நிறுத்திவிடுமாம்!

இந்த ஜோக்கில் வருவது போல, பெண்களைவிட விலங்குகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்ட காலமும் ஒன்று இருந்தது.

சீனாவில் அந்த நாட்களில் பெண்ணானவள் உயிரும், உணர்வுகளும் அற்ற ஒரு ஜடப் பொருளாகத் தான் கருதப்பட்டாள். ஆணுடைய உடமையான அவளை, அவன் கொலை செய்வது உட்பட எது வேண்டுமானாலும் செய்யலாம்; அதனால் அவன் குற்றவாளியாகக் கருதப்பட மாட்டான் என்றது அந்த நாட்டுச் சட்டம்.

நம் நாட்டிலோ, கணவன் இறந்தால் அவனுடன் மனைவியையும் சேர்த்து எரித்துக் கொல்லும், சதி எனப்படும் பயங்கரமான பழக்கம் பல்லாண்டு காலம் நிலவி வந்தது. மனைவிக்கான கடமை, கணவனுக்கு இன்பம் அளிப்பது மட்டுமே என்பதால், அவன் இறப்புக்குப் பின் வாழும் உரிமையையும் மனைவி இழந்துவிடுகிறாள் என்றது நம் சமுதாயம்.

தன்னுடைய அதிகார வெறியினாலும், அகம்பாவத்தாலும், ஆண் & பெண் என்ற பிரிக்க முடியாத இரு கூறுகளில் ஒன்றான பெண்ணை அடக்கி ஆண்டு, அவள் முழுத்திறனுடன் இயங்க இயலாமல் ஆண் செய்ததால், சமுதாயத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு கொஞ்ச நஞ்சமன்று.

உபநிஷத்தில், ஞானி ஒருவர் திருமணம் புரிந்து கொண்ட புது மண மகளை ‘நீ பத்து அழகிய குழந்தைகளின் தாயாகப் பெறுவாயாக. பிறகு கண வனையே உன்னுடைய பதினோராவது குழந்தையாக நேசிப்பாயாக. கணவனுக்கே தாயான பின்புதான், மனைவி என்ற ஸ்தானத்தில் நீ முழுமை பெறுகி றாய் என்பதை அறிந்து கொள்வாயாக!’ என்று ஆசீர்வதிக்கிறார்.

பெண் அன்பின் வடிவமானவள். அதன் வெளிப்பாடான தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிடத்திலும் பொங்கித் ததும்பும் இயற்கையான உணர்வு. இது ஒன்றே நம்மை வாழ்வித்து, வளப்படுத்தும் பேருணர்வாகும் என்ற அரிய உண்மைதான் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆணைவிட பெண் சிறந்தவள் என்று சொல்வதோ, இல்லை.. பெண்ணை விட ஆண் உயர்ந்தவன் என்று கொள்வதோ அறியாமையால் எழுந்த கருத்து.

இருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். உருவத்திலோ, செயலிலோ சிறிது வேறுபட்டிருந்தாலும், எதிரிகளாக இல்லாமல், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து செயலாற்றக் கூடியவர்கள். ஒருவர் குறையை மற்றவர் இட்டுப் பூர்த்தி செய்து ஓர் அழகிய முழுமையை உருவாக்கக் கூடியவர்கள்.

இதை முதலில் நீங்கள் உணர்ந்து திருந்துங்கள். உங்கள் கணவருக்கு உணர்த்துங்கள். உங்கள் மகளுக்கும் உணர்த்தி அவளது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய வழி செய்யுங்கள்.